பக்கம் எண் :

திருக்குறள்73அறம்

37. அவா அறுத்தல்
 

361.

அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்

தவாஅப் பிறப்பீனும் வித்து.

 

ஆசையை,   எல்லா  உயிர்களிடமும்,  எல்லாக் காலத்திலும் தவறாமல்
தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.
 

362.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்.

 

விரும்புவதானால்  பிறக்காமலே இருந்திருக்க வேண்டும் என்று ஒருவன்
எண்ணுகிற  அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில்
வரும்.
 

363.

வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

ஆண்டும் அஃதொப்ப தில்.

 

தீமை  விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப்
போன்ற  செல்வம்  இங்கு  எதுவுமில்லை; வேறு எங்கும் கூட  அத்தகைய
ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.
 

364.

தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்.

 

தூய்மை   என்பது    பேராசையற்ற   தன்மையாகும்.    அத்தூய்மை
வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.
 

365.

அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்

அற்றாக அற்ற திலர்.

 

ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர்,
தூய துறவியாக மாட்டார்.