பக்கம் எண் :

31

(ப-ரை.) பொருள் இலான் - செல்வ மில்லாதவன், வேளாண்மை - (பிறர்க்கு) உதவி புரிதலை, காமுறுதல் - விரும்புதல், இன்னா - துன்பமாம்; நெடு மாடம் - நெடிய மாடங்களையுடைய, நீள் நகர் - பெரிய நகரத்திலே, கைத்து இன்மை - பொருளின்றி யிருத்தல், இன்னா - துன்பமாம்; வரு மனை - வரப்பட்ட மனையிலுள்ளாரை, பார்த்திருந்து - எதிர்நோக்கியிருந்து, ஊண் உண்ணுதல், இன்னா - துன்பமாம்; கெடும் இடம் - வறுமையுள்ள இடத்தில், கைவிடுவார் - கைவிட்டு நீங்குவாரது, நட்பு கேண்மை, இன்னா - துன்பமாம் எ-று.

வேளாண்மை - உபகாரம் வருமனை பார்த்திருந்தூண் என்றது பிறர் மனையை அடைந்து அம் மனைக்குரியாரது செவ்வி நோக்கி யிருந்துண்டல் ஏன்றபடி. கெடுமிடங் கைவிடுவார் நட்பு இன்னா வென்பதனைக் ‘கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை யுள்ளினு முள்ளஞ் சுடும' என்னுந் திருக்குறளானு மறிக.

37. நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து1போகுத லின்னா
அறியான் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல்.

(ப-ரை.) நறிய மலர் - நல்ல மலரானது, பெரிய நாறாமை - மிகவும் மணம் வீசாதிருத்தல், இன்னா - துன்பமாம்; துறை அறியான் - துறையை அறியாதவன், நீர் இழிந்து போகுதல் - நீரில் இறங்கிச் செல்லுதல், இன்னா - துனபமாம்; அறியான் (நூற்பொருள்) அறியாதவன், வினாப்படுதல் - (அறிவுடையோரால்) வினாப்படுதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, சிறியோர் மேல் - சிறியவர்மீது, செற்றங் கொளல் - சினங் கொள்ளுதல், இன்னா - துன்பமாம் எ-று.

நறிய - நல்ல, அழகுடைய, துறை - நீரில் இறங்குதற்கும் ஏறுதற்குமுரிய வழி அறியா நீர் என்பது பாடமாயின் அறியப்படாத நீர் என்க. சிறியார் - வெகுளி செல்லுதற்குரிய எளிமையுடையார்; குழவிப் பருவத்தினருமாம்.

38. பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா
மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா
வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா
திறனிலான் செய்யும் வினை.


(பாடம்) 1. துறையறியா நீரிழிந்து