திரிகடுகம்
மூலமும் விருத்தியுரையும் காப்பு கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் - நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி. (இதன் பொருள்) கண் அகல் - இடம் அகன்ற, ஞாலம் - பூமியை, அளந்ததூஉம் - அளந்ததும், காமரு - விரும்பப்பட்ட, சீர் - சிறப்பையுடைய, தண் - குளிர்ச்சியும், நறும் - மணமும் (பொருந்திய), பூ குருந்தம் - மலர்களையுடைய குருந்த மரத்தை, சாய்த்ததூஉம் - முறித்ததும், நண்ணிய - கிட்டிவந்த, மாயச் சகடம் - வஞ்சகமான வண்டியை, உதைத்ததூஉம் - உதைத்ததும், இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும் (செய்தவை), பூவை - காயாம்பூவைப் போலும், வண்ணன் - நிறத்தினையுடைய திருமாலின், அடி - திருவடிகளாம்; (என்றவாறு). எடுத்துக் கொண்ட நூல் இனிது முற்றுப் பெறும் பொருட்டு இச் செய்யுளால் கடவுள் வணக்கம் செய்யப்பட்டது. கடவுள் வணக்கம் ஏற்புடைக் கடவுள் வணக்கம், வழிபடு கடவுள் வணக்கம் என் றிருவகைப்படும். இது வழிபடுகடவுள் வணக்கம். இங்குக் குறித்த கடவுளே காத்தற் கடவுளாகவும் இருக்கின்றார். காப்புச் செய்யுளில் காக்கும்படி சிறப்பாக வேண்டப்படுபவர் திருமாலும் பிள்ளையாரும் ஆவர். இக் கடவுள் வாழ்த்துப் படர்க்கையிற் கூறப்பட்டுள்ளது.
|