(இ-ள்.) பொய் - பொய்ச் சொற்களை, வழங்கி - பேசி, வாழும் - (அதனால் உயிர்) வாழ்கின்ற, பொறி அறையும் - திருவில்லாதவனும், கை - முறைமை, திரிந்து - வேறுபட்டு, தாழ்வு இடத்து - (ஒருவன்) தாழ்ந்த இடத்து, நேர் - (அவனைத் தனக்கு) நேராக, கருதும் - நினைக்கின்ற, தட்டையும் - மூங்கில் போலும் (புரைபட்ட) மனத்தவனும், ஊழினால் - (ஒருவனைச் சேரவேண்டிய) முறையினால், ஒட்டி - சேர்ந்து, வினை - (அவன்) காரியத்திலே, நலம் (தனக்குப்) பயன், பார்ப்பானும் - பார்க்கின்றவனும், இ மூவர் - ஆகிய இம் மூவரும், நட்க - (யாவராலும்) நட்புக் கொள்ள, படாஅதவர் - தகாதவர்; (எ-று.) (க-ரை.) "பொய் சொல்லும் வாய்க்குப் போசனம் கிடையாது" என்றபடி பொய் சொல்பவனிடம் செல்வம் நிலையாது; தனக்கு மேம்பட்டவன் ஏதாவது காரணத்தால் தாழ்வடைந்த காலத்தும், அவனைத் தனக்கு மேலானவனாகவே கருதவேண்டும்; நட்புச் செய்யப்பட்டவனிடமிருந்து தனக்கு என்ன பயனுண்டாமென்று எதிர்பார்த்தல் தகாதது. பொறி - இலக்குமி; இங்குச் செல்வத்தைக் குறித்தது - அறை - அறுதலையுடையவன், ஐ : கருத்தாப் பொருள் விகுதி, இனிப் பொறி அறை என்பதற்கு அறிவற்றவன் என்றும் பொருள் கூறலாம். கை - ஒழுக்கம். தட்டை - மூங்கில்; மேலோரை வணங்காமையால் தட்டை என அஃறிணைப் பொருளாகக் கூறப்பட்டது; உவமையாகு பெயர். ஊழ்-முறைமை. நட்கப்படாதவர் : வினையாலணையும் பெயர்; நள் : பகுதி, கு : சாரியை, ப் : சந்தி, படு : செயப்பாட்டு வினைப் பொருள் விகுதி, உகரக்கேடும், ளகரத்திரிபும் சந்தி. நட்கப்படு என்ற பகுதியுடன் ஆ : எதிர்மறை விகுதி, த் : விரித்தல் விகாரம், அ : சாரியை, வ் : சந்தி, அர் : பலர்பால் விகுதி, பொறியறை, தட்டை என்ற இரண்டும் உயர்திணைச் சிறப்புப் பெயராகிய பார்ப்பான் என்பதோடு விரவிச் சிறப்பினால் உயர்திணை முடிபேற்றன : படாஅதவர் : இசைநிறை அளபெடை. (15) 16. மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப் பெண்ணினுட் கற்புடையாட் பெற்றானும் - உண்ணுநீர் கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர் சாவா உடம்பெய்தி னார்.
|