பக்கம் எண் :

22

(க-ரை.) பற்றையும், அவாவையும், பொய்யையும் நீக்கினால் வீடடையலாம்.

ஒன்றின்மேற் பற்றிருந்தால் அவை ஒழித்து அங்கங்குச் செல்வது கூடாமையால் பாசத்தளை யென்றும், ஒன்றின்மேல் ஆசை மேலே மேலே ஓடிக்கொண்டிருத்தலால் அவாத்தேர் என்றுங் கூறினார். "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்ற குறளுக்கு இணங்கப் பொய்யாமை விளக்கம் எனப்படுதலால், பொய்யுரை இருள் எனப்பட்டது. பற்று - அகப்பற்று புறப்பற்று என்றிருவகைத்து; நான் என்னும் உணர்ச்சி யுடனிருப்பது அகப்பற்று. எனது என்னும் உணர்ச்சியுடனிருப்பது புறப்பற்று. பற்று - பற்றுதல் : முதனிலைத் தொழிற் பெயர். பொய்த்து பொய்ம்மை என்னும் பண்படியாகப் பிறந்த அஃறிணை யொன்றன்பாற் பெயர்ச்சொல். பொய்த்துரை : இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. தெற்றென : செயவனெச்சம். வித்து - விதை, முளை. "அவா என்ப எல்லா வுயிர்க்கும் எஞ்ஞான்றும், தவாஅப் பிறப்பீனும் வித்து" என்றார் வள்ளுவனாரும். இதற்கு உடம்பு நீங்கிப்போங் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும், அக் கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப அவ் வுயிரை அவ்வவா அக் கதிக்கட் கொண்டு செல்லுமாதலால், அதனைப் பிறப்பீனும் வித்து என்று பரிமேலழகர் உரை விரித்திருப்பது கருதத் தக்கது. வீடும் - அழியும்; வீடுதல் - அழிதல் : தன்வினை.

(22)

 23. தானங் கொடுக்குந் தகைமையு மானத்தார்
குற்றங் கடிந்த வொழுக்கமுந் - தெற்றெனப்
பல்பொரு ணீங்கிய சிந்தையும் இம்மூன்றும்
நல்வினை யார்க்குங் கயிறு.

(இ-ள்.) தானம் - தானத்தை, கொடுக்கும் - கொடுக்கின்ற, தகைமையும் - பெருஞ் செய்கையும்; மானத்தார் - பழிக்கு நாணுதலுடையாரது, குற்றம் கடிந்த - குற்றத்தை நீக்கிய ஒழுக்கமும் - நல்லொழுக்கமும்; தெள்றென - தெளிய (உண்மையாக), பல் பொருள் பல விடயங்களினின்றும், நீங்கிய - ஒழிந்த சிந்தையும் - எண்ணமும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும்,