27. உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும் பால்பற்றிச் சொல்லா விடுதலுந் - தோல்வற்றிச் சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றுந் தூஉய மென்பார் தொழில். (இ-ள்.) உண்பொழுது - உண்ணுதற்குரிய காலத்தில், நீர் ஆடி - குளித்து, உண்டலும் - உண்ணுதலும்; என் பெறினும் - (சாட்சியாகும் பொழுது) எவ்வளவு பெரும் பயனை அடைவதாயிருந்தாலும், பால் - ஒரு பக்கம், பற்றி - சார்ந்து, சொல்லா விடுதலும் - பொய்க்கரி சொல்லாமலிருத்தலும்; தோல் வற்றி - (உணவின்மையால்) உடம்பு இளைத்து, சாயினும் - அழிவதாயிருந்தாலும், சான்று ஆண்மை - பல நற்குணங்களால் நிறைந்து அவற்றை ஆளுதல், குன்றாமை - குறையாமையும்; இ மூன்றும் இவை மூன்றும், தூஉயம் - (மன மொழி மெய்களால்) குற்றமற்றவர்களாயிருக்கின்றோம், என்பார் - என்று கருதுவோர் தொழில் - செயல்களாம், (எ-று.) (க-ரை.) நீராடி யுண்பதும், பொய்க்கரி புகலாமலிருப்பதும், உயிர் நீங்கினும் சான்றாண்மை நீங்காதிருப்பதும் தூயவர் செயல்கள். விதித்த காலங்களில் நீராடக் கூடாமற் போனாலும் உண்ணும் பொழுதாயினும், நீராடுதல் இன்றியமையாத தென்பது. என் : எவன் என்னும் வினாப்பெயர். சான்று - அறிவின் நிறைவு; சால் என்னும் உரிச்சொல் லடியாகப் பிறந்த பெயர்; று : விகுதி, ஆண்மை - ஆளுதல்; தொழிற்பெயர். தோல் - உடம்பு : சினையாகு பெயர். வற்றி : வறுமை என்னும் பண்புப் பகுதி ஈறு கெட்டுப் பகுதி இரட்டித்து இகர விகுதி பெற்றது. தூஉயம் : உயிரளபெடை; இசை நிறைத்தற்கண் வந்தது. சான்றாண்மையாவது - பல குணங்களாலும் நிறைந்து அவற்றை யாடற்றன்மை. ‘ஊழி பெயரினுந் தாம் பெயரார் சான்றாண்மைக், காழி யெனப்படுவார்.' என்ற பொய்யாமொழிக் கிணங்கித் தோல்வற்றிச் சாயினும் என்றார். பால் - பக்கம். வள்ளுவரும் "சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந் தொருபாற், கோடாமை சான்றோர்க் கணி" என்று கூறியுள்ளார். இதில் ஒருபாற் கோடாமை யாவது - வினாவிடைகளாற் கேட்டவற்றை மறையாது பகை நொதுமல், நட்பென்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதல். நீராடுவதனால் அழுக்கு முதலிய உடம்பின் குற்றம்.
|