பாலில் பிரை முதலிய பொருள்களுள் ஒன்று கலக்கின், அது கெடுதல் போல, மனத்தூய்மையில் காமம் முதலிய குற்றம் மூன்றனுள் ஒன்று கலக்கினும் அத் தூய்மை கெடுமாதலால், பால் போலுந் தூய்மை எனப்பட்டது. வாய்மையுடையார் வழக்கு - மெய்ந்நெறியுடையார் ஒழுங்கு எனலுமாம். வழக்கு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்; தொழிலாகுபெயருமாம். சால்பினில் : இல் : ஐந்தனுருபு, ஏதுப்பொருள். (37) 38. தன்னை வியந்து தருக்கலுந் தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய பல்பொருள் வெஃகுஞ் சிறுமையும் இம்மூன்றுஞ் செல்வ முடைக்கும் படை. (இ-ள்.) தன்னை - ஒருவன் தன்னை, வியந்து - (தானே) நன்கு மதித்து, தருக்கலும் - அகங்கரித்தலும்; தாழ்வு இன்றி - அடக்கம் இல்லாமல், கொன்னே - வீணாக, வெகுளி - சினத்தை, பெருக்கலும் - பெருகச் செய்தலும்; முன்னிய - கருதிய, பல்பொருள் - பலவகைப் பொருள்களையும், வெஃகும் - இச்சிக்கின்ற (விரும்புகின்ற), சிறுமையும் - சிறுமைத் தன்மையும்; இ மூன்றும் - ஆகிய இந்த மூன்றும்; செல்வம் - (ஒருவன்) செல்வத்தை, உடைக்கும் படை - அழிக்கும் கருவி; (எ-று.) (க-ரை.) தற்புகழ்ந்து செருக்குவதும், வீணாகச் சினங் கொள்வதும், பிறர் பொருளை விரும்புவதும் செல்வத்தைத் தேய்க்கும் படை என்றபடி. வியந்து : தருக்கல் : விய, தருக்கு : பகுதிகள். கொன் : பயனின்மையைக் குறிக்கும் இடைச்சொல். வெகுளி : தொழிற்பெயர் - வெகுள் : பகுதி. முன்னிய - முற்பட்ட என்பதுமாம். படை : படு என்னும் பகுதியடியாகப் பிறந்த தொழிற்பெயர். தன்னை வியத்தலால் அடக்கமின்மையும், வெகுளி பெருக்குதலால் துணையாயினவர் பிரிவும், பல பொருளையும் விழைதலால் குற்றமும் விளங்கும் என்பது, இம்மூன்றும் படையென்று உருவகிக்கப்பட்டன. (38) 39. புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டீர்த் தோய்தல் மலமயக்கங் கள்ளுண்டு வாழ்தல் - சொலைமுனிந்து பொய்ம்மயக் கஞ்சூதின் கண்தங்கல் இம்மூன்றும் நன்மையி லாளர் தொழில்.
|