(இ-ள்.) புலை - இழி தன்மையாடு, மயக்கம் - கலத்தலாவது, பொருட் பெண்டீர் - பொருளை விரும்பி நிற்கும் வேசியரை, வேண்டி - விரும்பி, தோய்தல் - கூடுதலாம்; கலம் மயக்கம் - பிறர் எச்சிற் கலத்தோடு கலத்தலாவது, கள் உண்டு - கள்ளைக்குடித்து வாழ்தல் - வாழ்தலாம்; சொல்லை - (பெரியோர் கூறும் உண்மை) மொழியை, முனிந்து - வெறுத்து, பொய் மயக்கம் - பொய்யோடு கலத்தலாவது. சூதின்கண் தங்கல் - சூதாட்டத்தில் இருத்தலாம். இ மூன்றும் - ஆகிய இந்த மூன்றும், நன்மை - அறம், இலாளர் - இல்லாதவரது, தொழில் - தொழில்களாம், (எ-று.) (க-ரை.) வேசியரைச் சேர்வதாகிய நீசத்தன்மையும், கள்ளுண்டலாகிய பிறர் எச்சிலை யுண்பதும், பொய்யை மேற்கொள்வதாய சூதாடுமிடத்திற் சேர்வதும் அறவழி நில்லாதார் தொழில்களாம். புலைமயக்கம் - புலையொடு மயக்கம், புலையை மயங்கும் மயக்கம், புலையினது மயக்கம் என்று மூன்று பொருளிலும் மயங்கும். பொருட் பெண்டிர் என்பது - பொருளை விரும்பும் பெண்டிர் பொருளுக்கு முயங்கும் பெண்டிர், பொருளால் முயங்கும் பெண்டிர் என முப்பொருளில் மயங்கினவாறு காண்க. கள்ளுண்டென்ற குறிப்பால் வாழ்தல்கெடுதலை யுணர்த்தியது. பெண்டீர்த் தோய்தல் என்பதில் நிலைமொழி உயர்திணைப் பெயராதலாலும், இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலாலும், இயல்பில் விகாரமாயிற்று. சொல் - ஈண்டு மெய். சூது தன்னாலாகும் ஆட்டத்தையுணர்த்தியது; கருவியாகு பெயர். நன்மையிலாளர் என்பதை நன்மை + இன்மை + ஆளர் என்று முறையே ஆறாம் வேற்றுமைத் தொகையாகவும் இரண்டாம் வேற்றுமைத் தொகையாகவும் கொள்க. (39) 40. வெகுளி நுணுக்கம் விறலு மகளீர்கட் கொத்த வொழுக்க முடைமையும் - பாத்துண்ணும் நல்லறி வாண்மை தலைப்படலும் இம்மூன்றுந் தொல்லறி வாளர் தொழில். (இ-ள்.) வெகுளி - (தம் இடத்து எழுந்த) சினத்தை, நுணுக்கும் - சுருங்கச் செய்யும், விறலும் - வலிமையும்; மகளீர்கட்கு -
|