இல்லை என்று இரப்பவனைப் பார்த்து இகழ்தலும் நல்லொழுக்கத்தை மேற் கொள்ளாதவர் செயல்களாம். ஈக எனப்படுவது தொகுத்தல் விகாரம் பெற்றது. (74) 75. வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத் துணர்வுடையா னோதிய நூலும் - புணர்வின்கண் தக்க தறியுந் தலைமகனும் இம்மூவர் பொத்தின்றிக் காழ்த்த மரம். (இ-ள்.) வள்ளன்மை - வரையாது கொடுத்தலை, பூண்டான்கண் - அணியாக மேற்கொண்டவனிடத்துள்ள, செல்வமும் - பொருளும்; உள்ளத்து - உள்ளத்தில், உணர்வு உடையான் - (கேட்டதனை) நினைத்துப் பார்க்கும் இயல்புடையவன், ஓதிய நூலும் - கற்ற நூற்புலமையும்; புணர்வின்கண் - (பிறர் தன்னைச்) சார்ந்தவிடத்து, தக்கது - (அவர்க்குச் செய்யத்) தக்க காரியத்தை, அறியும் தலைமகனும் - அறியும் தலைவனும்; இ மூவர் ஆகிய இம் மூவரும், பொத்துஇன்றி - பொந்தில்லாமல், காழ்த்த - வயிரம் பற்றிய, மரம் - மரம் போல அசைவற்றவராவர். (எ-று.) (க-ரை.) கொடையாளனிடத்துற்ற செல்வமும், அறிவொடு கற்ற அறநூலும், தன்னை யடுத்தவர்க்குச் செய்யத்தக்கதைத் தெரிந்தவனும் உறுதியான பொருள்கள் என்பது. வள்ளன்மை : பண்புப் பெயர்; ‘வள்' முதனிலை; ‘ள்' : சந்தி. நூல் : காரண வாகு பெயர். செல்வமும் நூலும் தலைமகனும் எனத் திணைவிரவிச் சிறப்பினால் அஃறிணை உயர்தினை முடிபேற்றது. பொத்து : பொந்து என்பதின் வலித்தல். (75) 76. மாரிநாள் வந்த விருந்தும் மனம்பிறிதாய்க் காரியத்திற் குன்றாக் கணிகையும் - வீரியத்து மாற்றம் மறுத்துரைக்குஞ் சேவகனும் இம்மூவர் போற்றற் கரியார் புரிந்து : (இ-ள்.) மாரிநாள் - மழைக்காலத்தில், வந்த விருந்தும் - வந்த விருந்தினரும், மனம் பிறிதாய் - தன் மனம் வேறொன்றிற் சென்றும், காரியத்தில் - பொருள் வருவாயினை மேற்கொள்ளுதலில், குன்றா - குறைவுபடாத, கணிகையும் - வேசையும்; வீரியத்து - (போரில் காட்டப் புகுந்த) வெற்றித் திறமையில், மாற்றம் - தலைவன் பகைவர்மேல் (அருளாற் கூறிய) சொல்லை,
|