யாகம் செய்யும் நாளின்கண்ணும் இகழாதே கொடையறஞ் செய்க; விருந்தினர்க்குஞ் சோறிடுக. (க-ரை.) கலியாண நாள் முதலிய ஐவகை நாட்களிலும் தானம் செய்வதுடன் விருந்தினர்க்குஞ் சோறிடுக. தேவர் நாள் - தெய்வத்திற்குச் செய்யப்படும் திருவிழாநாள். பிதிர்கள் - இறந்துபோன பெரியோர் அல்லது படைப்புக்காலந்தொட்டு விளங்கும் ஒருவகைத் தேவர். (48) குடிமை முதலியவற்றிற்குத் தக்க செயல் உடைநடை சொற்சோர்வு வைதலிந் நான்கும் நிலைமைக்குங் கல்விக்கும் ஆண்மைக்குந் தத்தங் குடிமைக்குந் தக்க செயல். (இ-ள்.) உடை - உடுத்தலும், நடை - நடத்தலும், சொற்சோர்வு - சொல் தவறுதலும், வைதல் - திட்டுதலும், இந்நான்கும் - ஆகிய இந்த நான்கும், தம் தம் - தங்கள் தங்களுடைய, நிலைமைக்கும் - பதவிக்கும், கல்விக்கும் - படிப்புக்கும், ஆண்மைக்கும் - ஆற்றலுக்கும், குடிமைக்கும் - குடிப்பிறப்புக்கும், தக்க - ஏற்ப அமையும், செயல் - செயல்களாம். (ப. பொ-ரை.) உடையும் நடையும் சொற்சோர்வும் வைதலும் என இந்நான்கும், தாம் அரசனால் சிறப்புப் பெற்றமைக்கும், தன் ஆண்மைக்கும், தம் கல்விக்கும், குடிப்பிறப்புக்கும் தக்கனவாக அமையும் செயல்களாம். (க-ரை.) உடை நடை முதலியவைகள் தத்தம் நிலைமை கல்வி முதலியவற்றுக்குத் தகுந்தபடி அமையும். சொற்சோர்வு - சொல்லினது சோர்வு; ஆறாம் வேற்றுமைத் தொகை; சொல் சோர்தல், அஃதாவது தவறுதல் : எழுவாய்த் தொடர். ஆண்மை : மை விகுதி தன்மைப்பொருள் குறித்தது. தக்க : வினையுரியாய் வந்தது. நிலைமை - தானம் அல்லது பதவி. ‘சொற் செலவு' என்றும் பாடம். (49) கேள்வியுடையோர் செயல்பழியா ரிழியார் பலருள் ளுறங்கார் இசையாத நேர்ந்து கரவார் இசைவின்றி இல்லாரை யெள்ளி இகழ்ந்துரையார் தள்ளியுந் தாங்கருங் கேள்வி யவர்.
|