பக்கம் எண் :

101

(வி-ம்.) அளவுக்குமீறி உண்டு நோயைத் தாமே உண்டாக்கிக் கோடலின், அந்நோயைப் போக்கும் ஆற்றலும் அவர்க்கு உண்டாம். அதுபோல, தமக்குப் பிறர் வாயிலாக வருந் துன்பங்கள் யாவும் தம்மாலேயே செய்துகொள்ளப்பட்டனவாதலின், அதனைத் தாமே நீக்குதல் வேண்டு மென்பதாம்.பிறரைத் தேடுதல் கூடாது.

'தமக்கு மருத்துவர் தாம்' என்பது பழமொழி.

(1)

150. கற்றதொன் றின்றி விடினும் கருமத்தை
அற்ற முடிப்பான் அறிவுடையான் - உற்றியம்பும்
நீத்தநீர்ச் சேர்ப்ப! இளையோனே யாயினும்
மூத்தானே யாடு மகன்.

(சொ-ள்.) உற்று இயம்பும் நீத்தம் நீர் சேர்ப்ப - பொருந்தி ஆரவாரிக்கும் பிரளய கால வெள்ளம்போல் பரக்கும் நீரையுடைய கடல்நாடனே!, கற்றது ஒன்று இன்றிவிடினும் - படித்தறிந்தது ஒரு சிறிதும் இல்லையாயினும்,கருமத்தை அற்றமுடிப்பான் அறிவுடையான் - தொடங்கிய செயலைச் சோம்பலின்றி முடிப்பவன் அறிவுடையானெனப்படுவான், ஆடுமகன் - அங்ஙனம் செயலை ஆற்றுவோன், இளையோனே யாயினும் மூத்தானே -ஆண்டில் இளையவனேயானாலும் அறிவில் முதிர்ந்தவன்எனப்படுவான்.

(க-து.) நூலறி வில்லானேயாயினும் கருமச் சூழ்ச்சியறிதலின், எடுத்த செயலை முடிப்போன்அறிவுடையா னெனப்படுவான்.

(வி-ம்.) நூலறிவு இன்றே யெனினும், செயலை முடிக்கும் கருமச் சூழ்ச்சி அவன்க ணிருத்தலின், அறிவுடையா னென்றே எண்ணத் தகும்.

'இளையோனே யாயினும் மூத்தானே யாடுமகன்' என்பது பழமொழி.

(2)

151. வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து
வாளாண்மை யாலும் வலியராய்த் - தாளாண்மை
தாழ்க்கு மடிகோ ளிலராய் வருந்தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று.

(சொ-ள்.) வேளாண்மை செய்து - தம்மோடு தொடர்பில்லாதவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்து, விருந்து ஓம்பி