இறுதி இரண்டடிகளும் ஒட்டு அணியின்பாற் பட்டதாகும். 'வினா முந்துறாத விடையில்லை,' 'கனா முந்துறாத வினையில்லை' - இவ்விரண்டும் இச் செய்யுளிற் கண்ட பழமொழிகள். (2) 13. கல்லாதான் கண்டகழிநுட்பம் காட்டரிதால் நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தலென் சொல்லால் வணக்கி வெகுண்(டு)அடு கிற்பார்க்கும் சொல்லாக்கால் சொல்லுவது இல். (சொ-ள்.) கல்லாதான் கண்ட கழிநுட்பம் - நூல்களைக் கல்லாதவன் தான் நுண்மையுற அறிந்ததாக நினைக்கும் மிக்க நுண்பொருளை, காட்டரிதால் - பிறருக்கு விளங்கும்படி எடுத்துக்காட்டுதல் இயலாது. (ஆனபின்), ஒருவன் - கல்வியும் சொல்வன்மையும் இல்லாத ஒருவன், நல்லேம் யாம் என்று நன்கு மதித்தல் என் - நல்ல பொருள் விளக்கம் உடையேம் என்று தன்னைத் தானே மிகப் பாராட்டுதல் எக்காரணம் பற்றி?, சொல்லால் வணக்கி வெகுண்டு அடுகிற்பார்க்கும் - தமது சொற்களால் தவத்திற்குப் பகையாயினாரைப் பணியச்செய்து, பணியாராயின் சினந்து கொல்லுகின்ற முனிவர்களுக்கும், சொல்லாக்கால் - தாங் கருதியதை எடுத்துச்சொல்ல முடியாத விடத்து, சொல்லுவது இல் -தவத்திற்குச் சொல்லப்பட்ட ஆற்றல்கள் இலவாம். (க-து.) கற்றார்க்குச் சொல்வன்மை இன்றியமையாது வேண்டப்படும் பொருள். (வி-ம்.) ‘ஒன்னார்த் தெறலும்' என்றபடி தீயோரை வணக்குதல், வெகுண்டு அடுதல் முதலியன தவஞ்செய்வார் தம் சொல்லாற்றலால் நிகழ்த்துவன. சொல்வன்மை யில்லாராயின், தவத்தினது ஆற்றலாகிய சாபஅருள் அவருக்கு இல்லை யென்பதாம். ‘முற்றத்துறந்த முனிவர்கட்கும் சொற்றிறம் வேண்டும்'இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி. (3) 14. கல்வியான் ஆய கழிநுட்பம் கல்லார்முன் சொல்லிய நல்லவுந் தீயவாம் - எல்லாம் இவர்வரை நாட! தமரையில் லார்க்கு நகரமும் காடுபோன் றாங்கு. (சொ-ள்.) எல்லாம் இவர் வரை நாட - எல்லாப் பொருள்களாலும் விரும்பப்படும் மலைநாட்டை உடையவனே!, தமரை
|