பக்கம் எண் :

111

(வி-ம்.) உரையின் வழுவாது என்றது இனிய சொற்களின் நீங்காது என்றபடி. 'உவப்ப' என்றமையின், அவர் துன்புறக் கொள்ளல் ஆகாது என்பதாம்.அங்ஙனம் கொள்ளினும் பயனின்றி யொழியும்.

'விரையிற் கருமம் சிதையும்' என்பது பழமொழி.

(3)

165. நிலைஇய பண்பிலார் நேரல்லர் என்றொன்
றுளைய உரையா துறுதியே கொள்க
வளையொலி ஐம்பாலாய்! வாங்கி யிருந்து
தொளையெண்ணார் அப்பந்தின் பார்.

(சொ-ள்.) வளை ஒலி ஐம்பாலாய் - சுருண்டு தழைத்த ஐந்து பகுதியாகிய கூந்தலையுடையாய், அப்பந் தின்பார் வாங்கியிருந்து தொளை யெண்ணார் - அப்பத்தை உண்ண விரும்பினவர்கள் அதைக் கையில் வாங்கிய பின்னர்த் தொளைகள் இருக்கின்றன வென்று குற்றங்கூறி அவற்றை நீக்குவாரில்லை, (அதுபோல) நிலை இய பண்பிலார் - நிலைபெற்ற பண்பில்லாதவர், நேர் அல்லர் என்று - நடுவு நிலைமையை உடையவர் அல்லர் என்று, உளைய ஒன்று உரையாது - மனம் வருந்தத்தக்க ஒரு சொல்லும் சொல்லாது.உறுதியே கொள்க - அவரிடத்தில் தாம் கொள்ள நினைத்தஉறுதியாகிய பயனையே கொள்க.

(க-து.) நமது காரியத்தை முடிக்கவல்லாரதுகுறைகளைக் கூறித் திரிய வேண்டாம். காரியம்முடியுமாற்றையே நோக்குக.

(வி-ம்.) அப்பந்தின்பார்தொளையிருத்தல் கருதி நீக்குவாரல்லர். அதுபோலக்,காரியத்தில் கண்ணுடையாரும் அவருடைய குற்றங்கருதித் தமது பயனை இழவார் என்பதாம்.

வாங்கியிருந்து தொளை யெண்ணார்அப்பந் தின்பார் என்பது பழமொழி.

(4)

166. அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது
கன்றுவிட் டாக்கறக்கும் போழ்தில் கறவானாய்
அம்புவிட் டாக்கறக்கு மாறு.

(சொ-ள்.)அன்பின் நெகிழ வழிபட்டு கொள்ளாது - தாம்பூண்ட அன்பினால் ஒருவன் நெகிழுமாறு அவனை வழிபட்டுத் தமது செயலை முடித்துக்கொள்ளாது, நின்ற பொழுதின் முடிவித்துக்கொள்வது -