(வி-ம்.) பொருள் தன்னைத் தொட்டவரை ஒட்டு மியல்புடையது. உணவுப்பொருளும் தன்னை யாக்கினாரால் சுவை அறியப்படும். ஆகவே பொருள்களே தன்னையடைவாரைப் பயனடையச் செய்வன வாதலால், தூய்மையுடையாரையே அதன்கண் நியமிக்கவேண்டும். பொருளினது இயல்பு உணர்த்து முகத்தான் தூய்மை உடையாரையே நியமிக்க வென்றது இச்செய்யுள். கலம் என்பது ஆகுபெயராய் உணவுப்பொருளை உணர்த்தி நின்றது. 'தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம்' என்பது பழமொழி. (12) 174. நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலராயின் காட்டிக் களைது மெனவேண்டா - ஓட்டி இடம்பட்ட கண்ணாய்! இறக்குமை யாட்டை உடம்படுத்து வௌவுண்டா ரில். (சொ-ள்.) ஓட்டி இடம்பட்ட கண்ணாய் - குழையை அலைத்து (விளங்கும்) அகன்ற கண்களை உடையாய்!, இறக்கும் மையாட்டை - இறக்கும் நிலையிலுள்ள காராட்டை, உடம்படுத்து - உடன்பாடு பெறச்செய்து, வௌவுண்டார் இல் - அதன் சம்மதத்தின்பேரில் குருதிகொண்டார் உலகத்தில்லை. (ஆகையால்), நாட்டி கொளப்பட்டார் - தம்மாலே தங்காரியத்தின் பொருட்டு நாட்டிக் கொள்ளப்பட்டவர்கள், நன்மை இலராயின் - நன்மையைச் செய்தல் இலராயின், காட்டி - அவரிடத்து அதனை எடுத்துக்காட்டி, களைவேம் என வேண்டா - அவர் உடன்பாடுபெற்றுச் செயலினின்றும் நீக்குவோம் என்று நினைக்கவேண்டா. (க-து.) தம்மால் நிலைநாட்டப்பட்டார் தமக்கு நன்மை செய்யாராயின் அவரிடம் சொல்லாதே அவரைநீக்குதல் வேண்டும். (வி-ம்.) காராடு - வெள்ளாடு. ஆடு தான் இறந்துபோவதை உறுதியாக அறிந்திருப்பினும், இறப்பதற்கு முன்பு மனமொப்பித் தன்னைப் பிறர் வௌவ இயையாது. அதுபோல, நம்மால் நாட்டிக் கொள்ளப்பட்டாரும் அவர் செய்த குற்றத்தை எடுத்துக் காட்டி நீக்க நினைப்பின் நீங்கார். பலபல கூறிப் பின்னரும் அச்செயலைச் செய்யவே முற்படுவர். ஆதலால், அவரிடங் கூறாதே நீக்குகவென்பதாம். 'உடம்படுத்து' என்றதற் கேற்ப அவர்க்கு எடுத்துக்காட்டி அவர் உடன்பாடு பெற்று என்று பொருளுரைக்கப்பட்டது. (13)
|