21.பொருள். 196. தெருளா தொழுகும் திறனிலா தாரைப் பொருளா லறுத்தல் பொருளே - பொருள்கொடுப்பின் பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேல்குத்தின் காணியின் குத்தே வலிது. (சொ-ள்.) தெருளாது ஒழுகும் திறன் இலாதாரை - தன்னைத்தெளியாது செருக்கோடு ஒழுகுகின்ற திறப்பாடில்லாத பகைவரை, பொருளால் அறுத்தல் பொருளே - பொருள் கொண்டு கொல்லுதலே செய்யத்தக்க காரியம், பொருள் கொடுப்பின் - (அப்பகைவரைக் கொல்லும் பொருட்டுச் சிலர்க்குப்) பொருளினைக் கொடுப்பின், பாணித்து நிற்கிற்பார் - அவரைக் கொல்லாது தாமதித்து நிற்பார், யார் உளர் - யாவர் உளர், வேல் குத்தின் - வேலாற் குத்துதலைவிட, காணியின் குத்தே - காணிப்பொருளால் குத்துவதே, வலிது -வலிமை யுடையதாம். (க-து.) பகைவரைப் பொருளாற் கோறலே சிறந்ததாதலின் பொருளினை மிகுதியுஞ்செய்க. (வி-ம்.) 'பொருளால் அறுத்தல் பொருளே' என்பது பொருளினைச் செய்யவே, பெரும்படையும் நட்பு முடையராவர்; ஆகவே, பகைவர் தருக்கொழிந்து தாமே யடங்குவர் என்பதாம். 'பொருள் கொடுப்பின் பாணித்து நிற்கிற்பார் யாருளர்' என்பதற்குப் பொருளினைக் கொடுப்பின் பெரும்படை, நட்பு என்றிவை போன்றின்றியமையாதனவற்றுள் தம்மோடு சேராது தாமதித்து நிற்பார் யார் என்று பொருள் கொள்ளினுமாம். காணி - இது பொருளின் சிறிய அளவினைக் குறித்து நின்றது. பொருள்போல வேல் முதலியன பகைவரது செருக்கு முதலிய அருவப்பொருளை அறுக்கமாட்டா வாதலின் 'காணியின் குத்தே வலிது' என்றார். 'வேல்குத்தின் காணியின் குத்தே வலிது' என்பது பழமொழி. (1) 197. ஒல்லாத வின்றி உடையார் கருமங்கள் நல்லவாய் நாடி நடக்குமாம் - இல்லார்க் கிடரா வியலும் இலங்குநீர்ச் சேர்ப்ப! கடலுள்ளும் காண்பவே நன்கு. (சொ-ள்.) இலங்கும் நீர் சேர்ப்ப - விளங்குகின்ற கடல் நாடனே!, உடையார் கருமங்கள் - பொருள் உடையார் செய்யத்
|