வாய்பாட்டு எச்சம். செய் இப்பொழுது உரம் பெறாவிடினும் பழைய உரத்தால் பயன் தருதல் போல இப்பொழுது செல்வம் பெறுதற்குரிய ஏதுக்களைப் பெறாதாயினும், முன் செய்த வினையால் செல்வத்தைப் பெறுவர் என்பதாம். முன்செய்த வினையே காரணமென்பதாம். 'பழஞ்செய் போர் பின்று விடல்' என்பது பழமொழி. (9) 222. ஒற்கப்பட்டாற்றார் உணர உரைத்தபின் நற்செய்கை செய்வார்போல் காட்டி, நசையழுங்க வற்கென்ற செய்கை யதுவால்அவ் வாயுறைப் புற்கழுத்தில் யாத்து விடல். (சொ-ள்.) ஒற்கப்பட்டு - வறுமையா லொறுக்கப்பட்டு, ஆற்றார் - அதற்கு ஆற்றாதவர்களாய் (ஒருவரையடைந்து), உணர உரைத்தபின் - அவர் மனதிற் பதியுமாறு உரைத்தவிடத்து, நல்செய்கை செய்வார்போல் காட்டி - அவர்க்கு நல்ல செய்கையைச் செய்வார் போன்று தோற்றி, நசை அழுங்க வற்கென்று செய்கை அது - அதனான் அவர்கொண்ட விருப்பம் கெடுமாறு வலிய செய்கையைச் செய்தொழுகுமது, வாய் உறை - வாயிடத்தில் இடுவதாகக் காட்டிய, அ புல் - அந்தப் புற்களை, கழுத்தில் யாத்துவிடல் - பசுவின் கழுத்தில் கட்டிவிடுவதனோ டொக்கும். (க-து.) தம்பால் ஒன்று இரந்தாரைக் கொடுப்பதாகச் சொல்லிநீட்டித்து அலையவைத்தல் அடாத செய்கையாம். (வி-ம்.) 'பின்' என்னும் ஏழனுருபு 'கண்ணகன் ஞாலம்' என்றாற்போலப் பெயராய் நின்றது. 'உணர உரைத்தல்' என்பது அடுப்பு ஆம்பி பூத்ததெனவும், அதனால் முலை இல்லி தூர்ந்ததெனவும், அதனைச் சுவைத்து மகவு அழுகின்ற தெனவும் கூறுமாறு போல, வறுமையை உணர விரித்துரைத்தல். 'நசையழுங்க வற்கென்ற செய்கை' என்றது விரைவில் கொடாது நீட்டித்தலான் அவரை வருத்துதல். அது, ஒண் சுடர் நெடுநகர் வெளிறு கண் போகப் பன்னாள் இரங்கி வருந்துதல். புற்களை வாயிலிடுவார் போன்றுகாட்டி ஆவினது கழுத்தில் யாத்தால் பசு அதன் மேலுள்ள விருப்பத்தால், கழுத்திலுள்ளதைப் பெறும் பொருட்டு முயன்று துன்புறுதல்போல இரந்தார்க் கொன்றீவதாகக் கூறி நீட்டிப்பின் அதனைப்பெற வேண்டுமென்ற ஆசையால் அவர்கள் பன்னாளும் நின்று துன்புறுவர். ஆதலால் நீட்டித்தலாகாது என்பதாம்.
|