காலமறிந்து கொண்டீக என்பதையும் கொள்க. ஆவின் பாலைக் கறவாது சிலநாட்கள் நிறுத்தி வைப்பின் பால் வற்றிப் போகும். அரசனும் மிகுந்த இறைப்பொருள்களைக் குடிமக்களிடத்தில் நிறுத்திவைத்து நீண்டநாட்கள் சென்ற பின்னர் அவைகளைப் பெற நினைப்பின் அது முடியாதாம். குடிமக்கள் அவற்றைச் செலவு செய்துவிடுவர் என்பதாம். பாலைக் காலமறிந்து கறவாதது ஆவின் குற்றமன்றிக் கறவாதவன் குற்றமாதல் போல இதுவும்அரசனது குற்றமேயாம். 'பால்தலைப் பாலூறல் இல்' என்பது பழமொழி. (5) 246. அடைய அடைந்தாரை அல்லவை செய்து கொடைவேந்தன் கோல்கொடிய னாகிக் குடிகள்மேல் கூட்டிறப்பக் கொண்டு தலையளிப்பின் அஃதன்றோ சூட்டறுத்து வாயி லிடல். (சொ-ள்.) அடைய அடைந்தாரை - தன்னை நெருங்க அடைந்த குடிகளை, அல்லவை செய்து - துன்புறுத்தி, கொடைவேந்தன் - கொடையினையுடைய அரசன், கோல் கொடியனாகி - கொடுங்கோலை உடையவனாகி, குடிகள்மேல் கூட்டு இறப்பக் கொண்டு - குடிகளிடத்தில் தாங்கொள்ளும் இறைப்பொருளை மிகுதியாகக்கொண்டு, தலையளிப்பின் - பின்னர் அவருக்கு வேண்டிய நன்மைகளைச் செய்தலான் அன்பு செய்யின், அஃது - அச்செயல், சூட்டு அறுத்து வாயில் இடல் - மயிலினது உச்சிக் கொண்டையை அறுத்து அதற்குணவாக அதன் வாயில் இடுதலைஒக்கும். (க-து.) அரசன் இறைப்பொருளைத் துன்புறுத்தி மிகுதியாகக்கொண்டு பின்னர் எத்துணை செய்யினும் குடிகள்மகிழ்ச்சியடையார். (வி-ம்.) 'மன்னுயி ரெல்லாம் மண்ணாள் வேந்தன் தன்னுயிர்' என உயிராகக் கூறப்படுதல்பற்றி அடைந்தாரையென்றே ஒழியாது 'அடைய அடைந்தாரை' என்றார். 'அல்லவை செய்து' என்றது தான் மிகுதியாக இறைப்பொருளைக் கொள்ளவேண்டி - குடிகளைப் பலதலையான் துன்புறுத்தல். 'வாயில் இடல்' என்றமையால் பின்னர்ப் பலதலையான் வேண்டிய நன்மைகளை இடையீடின்றிச் செய்வார் என்பது பெறப்படும். முன்னர்த் துன்புறுத்திப் பின்னர் எத்துணை நன்மையைச் செய்யினும் குடிகள் மகிழார். அஃதன்றி அதனை யேற்கவும் மாட்டார். இறைப்பொருளை முறையாகக்கொண்டு முறையாக நன்மை செய்க என்பதாம். மிகுந்த நன்மைசெய்யவேண்டுமென்பது
|