பக்கம் எண் :

203

செய்யின், முதிராது - அப்பகைமை முதிர்வதில்லை; தனிமரம் காடு ஆதல் இல் - தனியே ஒருமரம்நின்று காடாதல் இல்லையாதலின்.

(க-து.) அரசன் பகைமை தோன்றியபொழுதே விரைந்து அதனைக் கொல்லக்கடவன் என்றது இது.

(வி-ம்.) 'இளைதாக முண்மரங் கொல்க' என்ற குறளின் விரிவு இது. தீரத்தீர்த்து என்றது, பகைவரினின்றும் அவரைப் பிரித்து அவர் தம்மை வலியிலராக்குதல். 'பிரித்தலும்' என்றதே இது. நனி நயப்பச்செய்து என்பது அவரினின்றும் பிரித்துத் தம்மொடு படுத்தல். 'பகை நட்பாக் கொண்டொழுகும் பண்புடைமை' என்பது இது. தனிமரம் காடாதல் இல்லாமை போல அவரும்அஞ்சத்தக்க பகைவராதல் இல்லையாம்.

'தனிமரம் காடாத லில்' என்பது பழமொழி.

(2)

287. முன்னலிந் தாற்ற முரண்கொண் டெழுந்தோரைப்
பின்னலிது மென்றிருத்தல் பேதைமையே - பின்சென்று
காம்பன்ன தோளி கடிதிற் கடித்தோடும்
பாம்பின்பல் கொள்வாரோ இல்.

(சொ-ள்.) காம்பு அன்ன தோளி - மூங்கிலையொத்த தோள்களையுடையாய், ஆன்ற முரண் கொண்டு - மிகவும் மாறுபாடு கொண்டு, முன் நலிந்து எழுந்தோரை - முற்பட்டுத் தம்மை நலிய எழுந்தவர்களை, பின் நலிதும் என்று இருத்தல் பேதைமையே - பின்னர் ஒருகாலத்து அவரை வருத்த மாட்டுவேம் என்று சோம்பி இருத்தல் அறியாமையேயாம், கடிதில் கடித்து ஓடும் பாம்பின் பல் - விரைந்து கடித்து ஓடுகின்ற பாம்பினது நச்சுப்பல்லை, பின் சென்று கொள்வாரோ இல் - அதன் பின் சென்று கொள்வார்ஒருவருமிலராதலின்.

(க-து.) பகைவரை அவர் மாறுபட்டு எழுவதற்கு முன்னரே அறிந்து களைக என்றது இது.

(வி-ம்.) 'பேதைமையே' என்று தேற்றினார், முன்னிருந்து களைதலன்றி அவர் மாறுபட்டு எழுகின்ற போழ்தும் களையாது பின்னர் ஒரு காலத்துக் களைவேம் என்றிருத்தலின். பின்னர்க் களைதல் ஒருதலையன்மையான் முன்னரே களைக என்பது. கடியாததற்கு முன்னர்ப் பல்லைக் களையாது கடித்த பின்னர்க் களைபவர் இலராதல் போலப் பின் நலிதுமென்று இல்லாதிருத்தல் வேண்டும்.