பக்கம் எண் :

238

338. உடுக்கை மருந்துறையுள் உண்டியோ டின்ன
கொடுத்துக் குறைதீர்த்த லாற்றி - விடுத்தின்சொல்
ஈயாமை யென்ப எருமை எறிந்தொருவர்
காயக்கு லோபிக்கு மாறு.

(சொ-ள்.) உடுக்கை மருந்து உறையுள் உண்டியோடு - உடையும் மருந்தும் உறையுளும் உணவோடு, இன்ன கொடுத்து குறைதீர்த்தல் ஆற்றி விடுத்து - இவற்றை யளித்து அவர் குறையை நீக்குதலைச் செய்து, இன்சொல் ஈயாமை - இனிய சொற்களைக் கூறாமை, ஒருவர் எருமை எறிந்து - ஒருவர் உணவின் பொருட்டு எருமையைக் கொன்று, காயக்கு லோபிக்கு மாறு - அதனைச் சமைத்தற்குரிய காயம் வாங்குதற்கு லோபிக்கு மாற்றையொக்கும், என்ப - என்று சொல்லுவார்கள்.

(க-து.) கொடைக்கு இன்சொல் இன்றியமையாது வேண்டப்படுவ தொன்றாம்.

(வி-ம்.) 'மருந்து' என்றமையான் இது கொடுத்தலும் சிறந்த அறமாம். எண்ணும்மை விகாரத்தாற் றொக்கது. உம்மை விரித்து 'ஒன்பதுங் குழவியோடு' என்பதுபோலக் கொள்க. ஆற்றிவிடுத்து : ஒருசொல் நீர்மைத்து. உணவின் பொருட்டு எருமையை வாங்கி அதனைக் கொன்று, காயம் வாங்குதற்பொருட்டு லோபித் தொழிவார் அதன் சுவையை முற்றும் அடையாததுபோல, வறியார்க்கு வேண்டுவன, இன்சொல் இன்றி ஈவார், அதனால் வரும்இன்பத்தை முற்றும் அடையாது ஒழிவர்.

'எருமை எறிந்தொருவர் காயக்கு லோபிக்கு மாறு' என்பது பழமொழி.

(12)

339. தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்ல
செத்துக சாந்து படுக்கமனன் - ஒத்துச்
சகத்தனாய் நின்றொழுகும் சால்பு தவமே
நுகத்துப் பகலாணி போன்று.

(சொ-ள்.) தத்தமக்குக் கொண்ட குறி தவம் அல்ல - தத்தமக்குத் தோன்றியவாறே கொண்ட வேடங்கள் தவமாகா; செத்துக - வாளாற் செத்துக, சாந்து படுக்க - அன்றிக் குளிர்ந்த சந்தனத்தைப் பூசுக, மனன் ஒத்து - மனம் பொருந்தி, நுகத்துப் பகல் ஆணி போன்று - நுகத்தின்கண் நடுவு நிற்கும்பகலாணியை