பக்கம் எண் :

253

(வி-ம்.) 'செல்வுழியும்' என்ற இறந்தது தழீஇய உம்மையான் இம்மைக்குரிய புகழ் செய்துகொள்ளலும் கொள்ளப்படும். அங்ஙனம் இரண்டும் செய்துகோடல் கரும்பினைச் சுவைத்துப் பின்னும் சுவைத்தற்குப் பாகு செய்து வைத்துக்கொள்ளுதலையொக்கும். மறுமைக்கு வேண்டுவனவற்றைப் பொருள் பெற்ற பொழுதே அதன் அருமையறிந்து செய்துகொள்ளுதலின், அவர் 'மாண்டவர்' எனப்பட்டார். மாட்சிமையில்லார் செல்வம் பெற்றால், மறுமையிலும் துன்புறத்தக்க செயலைச் செய்து கொள்வர் என்ற பொருள்ஆற்றலாற் கொள்ளப்படும்.

'கரும்பு மென்றிருந்து பாகு செயல்' என்பது பழமொழி.

(3)

360. ஈனுலகத் தாயின் இசைபெறூஉம் அஃதிறந்
தேனுலகத் தாயின் இனிததூஉம் - தானொருவன்
நாள்வாயும் நல்லறஞ் செய்வாற் கிரண்டுலகும்
வேள்வாய் கவட்டை நெறி.

(சொ-ள்.) ஒருவன் தான் - அறஞ் செய்கின்ற ஒருவன், ஈனுலகத்தாயின் இசை பெறும் இவ்வுலகின் திறத்து ஆராய்வோமாயின் புகழினைப் பெறுவான், அஃது இறந்து - இவ்வுலகினின்றும் நீங்கி, ஏனுலகத்தாயின் - மறுமை யுலகத்தின்கண் சென்றானாயின், அதுவும் இனிது - அவ்வுலகமும் இனிதாக ஆகும். (ஆதலின்), நாள்வாயும் நல்லறம் செய்வாற்கு - நாள்தோறும் நன்மையைப் பயக்கும் அறங்களைச் செய்கின்றவனுக்கு, இரண்டு உலகும் கவட்டை நெறி வாய் வேள் - இரண்டுலகி னின்பமும் கவட்டை நெறியின்கண் உளவாகிய கலியாணங்களைப் போலும்.

(க-து.) இம்மை மறுமை இன்பங்களை அறம் எய்துவித்தலால், அதனைநாள்தோறும் செய்க.

(வி-ம்.) இ + உலகம், முதல் நீண்டு நின்றது. இன் இசை நிறைக்கும் பொருட்டு வந்தது. ஏனை + உலகம், நிலைமொழி உயிர்கெட்டு நின்றது. 'இனிது அதுவும்' என்றது மறுமை யின்பத்தையும் அடைவான் என்பதை. ஒரு காரியங் கருதி ஒருவன் ஓர் ஊருக்குச் செல்லுகின்றான். அவ்வூருக்கு இரண்டு வழிகள் உள. அவ்விரண்டு வழிகளிலும் அவன் சேறற்குரிய திருமணங்கள் நடைபெறுகின்றன. அவன், ஒருவழியே சென்று ஒன்றினையும், திரும்பி மற்றொரு வழியே வந்து மற்றொன்றனையும் கண்டு இன்புறுகின்றான். அதுபோல, அறஞ் செய்வானும் இரண்டு இன்பங்களையும் அடைவான். இது 'இரண்டுலகும் வேள்வாய் கவட்டை நெறி'யெனப்பட்டது.

'வேள்வாய் கவட்டை நெறி' என்பது பழமொழி.

(4)