பக்கம் எண் :

264

அவன் விரும்பிய பொருளின் மிகுதியை. 'அறிந்தீவார்' என்றது பிறனொருவனிடம் இரவாவண்ணம் மிகுதியாகக் கொடுப்பார் என்பதை. கடிஞையில் கல்லிடுவார் இல்லை யாதல் போல, வறியோர் வேண்டிய பொருளை முன்னத்தான் அறிந்தீக.

'கடிஞையில் கல்லிடுவா ரில்'என்பது பழமொழி.

(4)

376. கூஉய்க் கொடுப்பதொன்றில்லெனினும் சார்ந்தார்க்குத்
தூஉய்ப் பயின்றாரே துன்பத் துடைக்கிற்பார்
வாய்ப்பத்தான் வாடியக் கண்ணும் பெருங்குதிரை
யாப்புள்வே றாகி விடும்.

(சொ-ள்.) பெருங்குதிரை வாய்ப்ப தான் வாடிய இடத்தும் - சிறந்த குதிரை பொருந்தத் தான் வாடிய காலத்தும், யாப்புள் வேறாகிவிடும் - போருக்குரியவற்றை வைத்துக் கட்டவே வேறு குதிரை போன்று ஆண்மை கொண்டு நிற்கும். (அது போல), கூய் கொடுப்பது ஒன்று இல் எனினும் - வறியோரை அழைத்துக் கொடுப்பதற்கு ஒரு பொருளும் இல்லை யாயினும், சார்ந்தார்க்கு - தம்மையடைந்து ஒரு பொருளை வேண்டினார்க்கு, தூய் பயின்றாரே - ஒரு பொருளைக் கொடுத்து அச் செயலில் அடிப்பட்டு வந்தவர்களே, துன்பம் துடைக்கிற்பார் - பிறருடையதுன்பத்தை நீக்க வல்லார்.

(க-து.) வறுமை யுற்றவிடத்தும் ஈகையின்நீங்காதே.

(வி-ம்.)துன்பங்கள் எல்லாவற்றினும் பசித் துன்பமே மிகக் கொடிது என்று நூல்களுள் கூறப்படுதலின், இத் துன்பத்தை நீக்குபவரே துன்பத்தை நீக்குபவராவர்.குதிரை வாடிய விடத்தும் போர்க்கல னணிந்தவுடனே முனைந்து நிற்றல் போல, வறுமை யுற்றவிடத்தும் வேண்டினார்க்கு ஒரு பொருளை ஈதலில் முனைந்துநிற்க.

'வாடிய' என்றது உணவின்றி இரு மருங்கும்ஒன்றிய நிலையை.

'வாடியக் கண்ணும் பெருங்குதிரை
யாப்புள்வே றாகி விடும்' என்பது பழமொழி.

(5)

377. அடுத்தொன் றிரந்தார்க்கொன்றீந்தாரைக் கொண்டார்
படுத்தேழை யாமென்று போகினும் போக
அடுத்தேறல் ஐம்பாலாய் யாவர்க்கே யானும்
கொடுத்தேழை யாயினார் இல்.