389. நட்டாரை யாக்கிப் பகைதணித்து வையெயிற்றுப் பட்டார் துடியிடை யார்ப்படர்ந் - தொட்டித் தொடங்கினா ரில்லத்த தன்பின் துறவா உடம்பினான் என்ன பயன். (சொ-ள்.) நட்டாரை ஆக்கி பகை தணித்து - தன்னுடன் நட்புச் செய்துகொண்டவர்களைச் செல்வமுடையவராகச் செய்து பகைவரை அழித்து, வை எயிற்று பட்டு ஆர் துடி இடையார் - கூரிய பற்களையும் பட்டுடை பொலியும் உடுக்கை போன்ற இடையினையு முடைய பெண்கள்மீது, படர்ந்து ஒட்டி - காதல் கொண்டு பொருந்தி, இல்லத்து தொடங்கினார் - இல்லறத்தைத் தொடங்கிச் செய்தவர்கள், அதன்பின் - அது முடிந்த பிறகு, துறவா உடம்பினான் பயன் என்ன -துறவறத்தில் துறந்து செல்லாத உடம்பினான் என்னபயனுண்டாம்? (க-து.) இல்லற நெறியில் நின்று அதன் பின்னர்த் துறவறம் சேர்க. (வி-ம்.) 'நட்டாரை ஆக்கி' என்றது, செல்வத்தால் அவர் குடியைப் பொலியச் செய்வதை.'நட்டவர் குடி உயர்க்குவை' என்பதே இது. 'துறவா உடம்பினான் என்ன பயன்' என்பதற்கு, அதன் பின்னும் துறந்து செல்லாத உடம்பு, அடைவதற்குரிய இன்பம் அவ் வில்லறத்தின்கண் என் உண்டாம் என்றாலும் ஆம். துறவறமாயின் தவஞ்செய்யவே மறுமைப்பே றடைதலுறுதி. இல்லற நின்று இன்பம் பெற்றுப் பேரின்பம் பெறுதற்குத் துறவற நெறியிற் சேர்தலே உடம்பினா லெய்தும் பயனாம். 'துறவா உடம்பினான் என்ன பயன்' என்பது பழமொழி. (3) 390. இல்வாழ்க்கையானும் இலதானும் மேற்கொள்ளார் நல்வாழ்க்கை போக நடுவுநின் - றெல்லாம் ஒருதலையாச் சென்று துணியா தவரே இருதலையும் காக்கழித் தார். (சொ-ள்.)இல் வாழ்க்கையானும் இலதானும் - இல்லறத்தை யாயினும் அஃதின்றி நின்ற துறவறத்தை யாயினும், மேற்கொள்ளார் - தாம் மேற்கொண் டொழுகாதவராகி, நல்வாழ்க்கை போக நடுவு நின்று - சிறந்த வாணாள் வறிதே கழிய இடை நின்று, எல்லாம் ஒரு தலையா சென்று துணியாதவரே - எல்லாவற்றையும் ஆழ்ந்து உறுதியாகத் துணிந்து ஒரு நெறிக்
|