பக்கம் எண் :

275

392. கொண்டொழுகு மூன்றற் குதவாப் பசித்தோற்றம்
பண்டொழுகி வந்த வளமைத்தங் - குண்டது
கும்பியிலுந் திச்சென் றெறிதலால் தன்னாசை
அம்பாயுள் புக்கு விடும்.

(சொ-ள்.)கொண்டு ஒழுகும் மூன்றிற்கு - தான் கொண்டுஒழுகுகின்ற மூன்றற்கும், உதவா பசி தோற்றம் - உதவி செய்த லில்லாத வேட்கைத் தோற்றம், பண்டு ஒழுகிவந்த வளமைத்து - முன்னர் நல்வினை செய்தமையான் வந்த செல்வத்தை, அங்கு உண்டு - அங்குத்தானே பயன்படுத்திக்கொண்டு, அது - அவ்வாசை, கும்பியில் உந்தி சென்று எறிதலால் - நரகச்சேற்றில் உதைத்துச் சென்று வீழ்த்தலால், தன் ஆசை அம்பு ஆயுள் புக்கு விடும் - ஒருவனுடைய ஆசையாகிய அம்பு ஆயுளைப் புகுந்து கெடுத்துவிடும்.

(க-து.) பிறர்க்குதவி செய்தலில்லாத ஆசையே ஒருவனைநரகத்துள் அழுத்தவல்லது.

(வி-ம்.) கொண்டு ஒழுகும் மூன்றாவது, விருந்தினரைப் புறந்தருதல், தெய்வத்திற்குச் சிறப்புச்செய்தல், இரவலர்க்கு ஈதல் முதலிய கடமையாகக் கொண்டு ஒழுக வேண்டியவற்றை.பசித்தல் விரும்புதலாதலின் வேட்கையாயிற்று. ஆசை கடமையையும் தவிர்த்து, செல்வத்தின் பயனாக விளையும் பிறர்க்கு ஈதலையும் நீக்கி, நரகத்துள் அழுத்தும். ஆதலின், ஒருவனது ஆயுளை அம்பாக நின்று அழித்தொழித்துவிடும். இரண்டும் துன்பஞ்செய்தலில் ஒக்குமாயினும். ஆசை மறுமையினும் துன்பம்விளையுமாறு செய்தலின், 'ஆசை அம்பு' என உருவக வாய்பாட்டாற் கூறப்பட்டது.

'தன்னாசை அம்பாயுள் புக்குவிடும்' என்பது பழமொழி.

(6)

393. செல்வத் துணையுந்தம் வாழ்நாட் டுணையுந்தாம்
தெள்ளி உணரார் சிறிதினால் செம்மாந்து
பள்ளிப்பால் வாழார் பதிமகிழ்ந்து வாழ்வாரே
முள்ளித்தேன் உண்ணு மவர்.

(சொ-ள்.) செல்வத் துணையும் - செல்வத்தின் அளவினையும், தம் வாழ்நாள் துணையும் - தம் வாழ்நாளின் அளவினையும், தாம் தெள்ளி உணரார் - தாம் தெளிய ஆராய்ந்து அறியாராகி, சிறிதினால் செம்மாந்து - சிறிய இல்லற இன்பத்தினாலே தருக்குற்று,