பக்கம் எண் :

34

'ஆற்றாது அவர் அழுத கண்ணீர் அவை அவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்துவிடும்' இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.

(5)

48. மிக்குடையர் ஆகிமிகமதிக்கப் பட்டாரை
ஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும்
நற்(கு)எளி(து) ஆகி விடினும் நளிர்வரைமேல்
கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல்.

(சொ-ள்.) நளிர் நரைமேல் கல் கிள்ளி கை உய்ந்தார் இல் -விளங்குகின்ற மலைமேல் உள்ள கல்லைக் கிள்ளுதலைச் செய்து கை வருந்துதலைத் தப்பினார் இல்லை, (ஆதலால்) மிக்கு உடையர் ஆகி மிக மதிக்கப்பட்டாரை - செல்வம் மிக உடையவர்களாகி அறிவுடைமையால் மிகவும் மதிக்கப்பட்டாரை, ஒற்கப்பட முயறும் என்றல் - அவர்கள் வருந்துமாறு தீய செயல்களைச் செய்வோம் என்று நினைத்தல், நற்கு எளிது ஆகிவிடினும் - மிகவும் எளிமையானாலும். இழுக்கு ஆகும் - செயலிற் செய்தால் மிக்கதுன்பமே உண்டாகும்.

(க-து.) அறிவு செல்வம் என்றிவைஉடையாரைத் துன்புறுத்தலாகாது.

(வி-ம்.) அறிவு செல்வம் என்ற இரண்டுமுடையாரைத் துன்புறுத்த நினைப்பாராயின், கல்லைக் கிள்ளிக் கைவருந்தினார் போல, நினைத்துச் செய்பவர் துன்புறுவரேயன்றி அவர்க்கு ஊறுஉண்டாவது இல்லை.

முயல் + தும் - முயறும் : தன்மைப் பன்மைமுற்று.

நன்கு என்பது நற்கு என வலிந்து நின்றது.

கல்வி, செல்வம் என்ற இரண்டனுள் ஒன்றே உடையாரை ஒரு வேளை நலிய நினைப்பின் கைகூடினும் கூடும். இரண்டும் உடையாரை எஞ்ஞான்றும் துன்புறுத்த இயலாது என்பார், 'மிக்குடையராகி மிக மதிக்கப் பட்டாரை'என்றார்.

'கல் கிள்ளிக் கைஉய்ந்தார் இல்' இஃது - இச்செய்யுளில் வந்த பழமொழி.

(6)

49. நீர்த்தகவு இல்லார் நிரம்பாமைத் தந்நலியின்
கூர்த்தவரைத் தாம்நலிதல் கோளன்றால் - சான்றவர்க்குப்
பார்த்(து) ஓடிச் சென்று கதம்பட்டு நாய்கவ்வின்
பேர்த்துநாய் கவ்வினார் இல்.