பக்கம் எண் :

59

'கடனன்றோ ஊரறிய நட்டார்க்கு உணா' என்பது பழமொழி.

(5)

86. தெற்றப் பகைவர்இடர்ப்பாடு கண்டக்கால்
மற்றுங்கண் ணோடுவர் மேன்மக்கள் - தெற்ற
நவைக்கப் படுந்தன்மைத் தாயினும் சான்றோர்
அவைப்படின் சாவாது பாம்பு.

(சொ-ள்.) பாம்பு - பாம்பானது, தெற்ற நவைக்கப்படுந்தன்மைத்து ஆயினும் - தெளிவாகத் துயர்செய்யப்படும் தன்மையது ஆயினும், சான்றோர் அவை படின் சாவாது - அறிவுடையோர் கூட்டத்திற் சென்றால் இறவாது; (அதுபோல), மேன் மக்கள் - உயர்குடிப் பிறந்தோர், தெற்ற பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால் - தெளிவாக அறியப்பட்ட பகைவர்கள் அடையும் துன்பத்தினைக் கண்டால், மற்றும் கண்ணோடுவர் - தமக்குப் பல பிழைகளைச் செய்தவராயிருப்பினும் மீண்டும் அவரிடத்தில் கண்ணோட்டம் செலுத்துவர்.

(க-து.) சான்றோர் துன்பப்படுபவர் தம் பகைவராயினும் அத்துன்பத்தை நீக்க முயலுவர்.

(வி-ம்.) இங்ஙனங் கண்ணோட்டஞ் செலுத்துவது ஊராண்மை யெனப்படும். அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன்றானை முழுதும்படத் தமியனா யகப்பட்டானது நிலைமை நோக்கி அயோத்திய ரிறை மேற்செல்லாது 'இன்று போய் நாளை வா' வென விட்டாற்போல்வதுஎன்பர் பரிமேலழகர்.

'சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு' என்பது பழமொழி.

(6)

87. இறப்ப எமக்கீ(து)இழிவரவென் றெண்ணார்
பிறப்பிற் சிறியாரைச் சென்று - பிறப்பினால்
சாலவு மிக்கவர் சார்ந்தடைந்து வாழ்பவே
தால வடைக்கலமே போன்று.

(சொ-ள்.) பிறப்பினால் சாலவும் மிக்கவர் - குடிப்பிறப்பினால் மிகவும் உயர்ந்தவர்கள், சென்று - போய்,பிறப்பிற் சிறியாரைச் சார்ந்து அடைந்து -