பக்கம் எண் :

1

முதுமொழிக் காஞ்சி
1. சிறந்த பத்து

1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.

(பழைய பொழிப்புரை.) கடல் சூழ்ந்த உலகத்து மக்கட்கெல்லாம் ஓதலினும் மிக்க சிறப்புடைத்து ஆசாரமுடைமை.

(பதவுரை.) ஆர்கலி உலகத்து - கடல்சூழ்ந்த உலகத்தில், மக்கட்கெல்லாம் - மனிதர் எல்லார்க்கும், ஒழுக்கமுடைமை - சதாசாரமுடையவராதல், ஓதலின் - நூல்களைக் கற்றலைக் காட்டிலும், சிறந்தன்று - சிறந்ததாம்.

"ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம்."- ஒளவையார்.

"மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்."- திருக்குறள்.

ஆர்கலி - நிறைந்த ஓசை - நிறைந்த ஓசையையுடையது - கடல் : வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. சிறந்தன்று - உடன்பாட்டு இறந்தகால வினைமுற்று : இதில் அன் சாரியை. ஆசாரம் - விலக்கியன ஒழித்து விதித்தன செய்தல் : சீலம்.