பக்கம் எண் :

33

"தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர்"- நன்னெறி.

ஆதலால் பகுத்துண்டல் அவர்க்கு எளிதென்பதாம்.

10. சார்பி லோருக் குறுகொலை யெளிது.

(ப-பொ.) நன்னட்பைச் சாராதோர்க்குப் பொருந்திய கொலைத்தொழில் செய்தல் எளிது.

"சால்பில்லோருக் குறுகொலையெளிது" என்று பாடங்கொண்டு "அமைந்த குணம் இல்லாதார்க்கு மிகவும் உயிர்க்கொலை எளிது" என்றுரைக்கின்றது ஒரு பிரதி.

(ப-ரை.) சார்பு இலோருக்கு - நல்ல நட்பாகிய சார்பு இல்லாதவர்க்கு, உறு கொலை - பொருந்திய கொலைத்தொழில் செய்தல், எளிது - எளிதாம்.

"மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும், இனந்தூய்மை தூவா வரும்" (திருக்குறள்) ஆதலால், நற்சார்பு இல்லார் கொலை முதலிய தீச்செயல்களை எளிதிற் செய்வர்.

IX. நல்கூர்ந்த பத்து.

1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
முறையி லரசனாடு நல்கூர்ந் தன்று.

(ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்துள் எல்லா மக்கட்கும், முறைமை செய்யா அரசனாடு வறுமையுறும்.

(ப-ரை.) ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட் கெல்லாம் - மனிதரெல்லார்க்கும், முறை இல் - நீதி முறை இல்லாத, அரசன் நாடு - அரசனது நாடானது, நல்கூர்ந்தன்று - வறுமையுடையதாம்.

"இயல்புளி கோலோச்சும் மன்னவ னாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு."

"முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்."

"நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறு நாடு கெடும்."- திருக்குறள்.