"பொய்யில் புலவர் புரிந்துறை மேலுலகம் ஐயமொன் றின்றி யறிந்துரைப்பின் - வெய்ய பகலின் றிரவின்று பற்றின்று துற்றின் றிகலின் றிளிவரவு மின்று" என்னும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாட்டு இங்கு நினைவு கூரற்பாலது. (66) 67. கூரம்பு வெம்மண லீர்மணி தூங்கலும் ஈரும் புகையிரு ளோடிருணூல் - ஆராய்ந் தழிகதி யிம்முறையா னான்றா ரறைந்தார் இழிகதி யிம்முறையா னேழு. (இ-ள்.) கூர் அம்பு - கூரான அம்புகள் எய்யும் இடமும், வெம் மணல் - சூடான மணல் நிறைந்த இடமும், ஈர் மணி - மிகவுங்குளிர்ச்சியான மணிகள் உருளுமிடமும், தூங்கலும் - தூக்கம் போல் மயக்கம் வருவிக்குமிடமும், ஈரும் புகை - உயிர்களை வருத்துகின்ற புகை கலந்த இடமும், இருளோடு - சிறிது இருள் பரவிய இடமும், இருள்- பேரிருள் சூழ்ந்த இடமுமென, இம்முறையான் - இவ்வகைப்பட்ட, இழி கதி ஏழு - குற்றஞ் செய்த உயிர்கள் இறங்கும் ஏழு தீக்குழிகளை, நூல்ஆராய்ந்து - அறிவு நூல்களை ஆராய்ந்து, அழி கதி ஆன்றார் - உயிர்கள் அழிதற்கு ஏதுவான இந்நரகங்களினின்றும் பிழைத்த சான்றோர்கள், இம்முறையான் - இம்முறைப்படி, அறைந்தார் - கூறினார்கள். (ப-பொ-ரை.) கூரிய வம்பும், வெம்மணலும் குளிர்ந்த மணியு, மொழுகியவன்று மீரத்தக்க புகையு, மிருளிலிருளுமென நூலால் நிரம்பினார் ஆயி னழியுங் கதிக ளிம் முறையினின்று மொழிந்த வருந்தவர் சொல்லினா ரிழிகதியாகிய நரகங்களில் முறையா னேழாக. (க-து.) அம்புள்ள இடம் முதலாகத் தீவாய்க் குழிகள் ஏழென்ப. அம்பு முதலியன ஏழும் தானி ஆகுபெயர்க ளென்க. உம்மை : எண். இருளோடு, இருளென்ற விடத்து ஓடு அவ்விரண்டின் வேற்றுமையைக் காட்டி, பிரித்தற்கு வந்தது. அழி கதியும் இழி கதியும் வினைத்தொகைகள். ஆன்றார் : அகன்றார் என்பதன் மரூஉ. (67)
|