பக்கம் எண் :


14

நூல்

அறப்பால்

அறத்தைப் பற்றிக் கூறும் பகுதியெனப்பொருள் படும். ஆடவர்க்குரிய உறுதிப்பொருளாகிய அறம், பொருள், இன்பம். வீடு என்ற நான்கின் முதல் நிற்பது அறம். ஆதலின் அறப்பால் முதலின் வைக்கப்பட்டது.

வெண்பா

1. அன்றமரிற் சொற்ற வறவுரைவீழ் தீக்கழுது
மன்று யர்ந்து போந்த வகைதேர்மின்-பொன்றா
அறமறிந்தோன் கண்ட வறம்பொருள்கேட் டல்லன்
மறமொறுக்க வாய்த்த வழக்கு.

(சொ-ள்) அன்று-முற்காலத்தில், அமரில் சொற்ற அறம் உரைவீழ் தீ கழுது-பாரதப்போரில் (கண்ணன் அருச்சுனற்குக் கூறிய கீதையாகிய) அறவுரையை விரும்பிக்கேட்ட கொடிய பேயானது, உயர்ந்து மன்று போந்த வகை தேர்மின்-(அறிவால்) உயர்வுற்று ஆன்றோரவையைப் போய்ச்சேர்ந்த வகையை ஆராய்வீர், பொன்றா அறம் அறிந்தேன் கண்டவறம் பொருள் கேட்டு - அழியாத தருமங்களையுணர்ந்தோன் அறிந்து கூறிய அறநூலினையும் பொருள் நூலினையும் (நீங்கள்) கேட்டு, அல்லல் மறம் ஒறுக்க - துன்பத்தை விளைக்கும் பாவங்களை நீக்குக, வாய்த்த வழக்கு(இது) - பொருந்திய நன்னெறி இதுவேயாம்.

(க-து) கொடிய பேயும் அறவுரை கேட்டுயர்ந்தது; ஆதலால் மக்களாகிய நீங்களும் ஆன்றோரறவுரை கேட்டுப் பாவம் நீக்கி வாழ்க.