(சொ-ள்) தெருட்டு ஆயம் காலத்தால் சேரான்-(யாவரையும்) தெளிவிக்கின்ற பொருள் வருவாயை, இளமைப்பருவத்திலேயே சேராதவன். குருடு ஆயன் நீள்கானம் கோடல் சிவண-கண்குருடாகிய இடையன் நீண்ட கானத்தினை (தன் ஆடுகளை மேய்ப்பதற்கு) இடமாகக் கொள்வதை ஒப்ப, பொருட்டு ஆகான்-ஒரு பொருளாக மதிக்கப்படான். நல்லறமும் பேணான்-நல்ல அறங்களையும் செய்ய விரும்பான். நாரம் இவர்த்தானாம்-மக்கட் கூட்டத்தால் வெறுக்கப்பட்டவனாவன், பொல்லாங்கு உறைவிடனாம்-தீமைகள் யாவும் தங்குவதற்கு இடமாவன். புல்-சிறியவன். (க-து) இளமையிற் பொருள் தேடாதவன், குருட்டாயன் காட்டில் ஆடு மேய்த்தது போல வாழ்வில் இடர்ப்பட்டுப் பிறரால் மதிக்கப்படாமல் வாழ்வான். (வி-ம்) செல்வம்; மக்களின் மயக்கத்தை நீக்கி மனத்தைத் தெளிவுபடுத்தும் என்ற கருத்தினால் தெருட்டு ஆயம் என்றார். ஆயம்-பொருள்வருவாய். ஆயன்எனற குறிப்பினால் ஆடுமேய்ப்பதற்கு என்பது வருவிக்கப்பட்டது. காடு கண்ணுக்கெட்டாத தூரமுள்ளது என்பார் "நீள் கானம்" என்றார். குருட்டிடையன் நீண்டகாட்டில் ஆடுகளை மேய்த்து அவற்றை ஒருவழிப் படுத்தித் தானும் அவற்றின் பின் வந்து வீடு சேரமுடியாதது போலப் பொருளில்லாதவனும் தன் வாழ்விற்குரிய பொருள்களைக்கூட்டி ஒருவழிப்படுத்தி நல்வாழ்வு நடத்தி முத்தியிற் போய்ச்சேரமுடியாது என விளக்கம் காண்க. பொருட்டு-பொருள். பொருள்+து=பொருட்டு. உயிராகிய பொருளையுடையது என்று பொருள் தரும். உயிர் பொருள் என்க. உயிர்ப்பொருளாக மதிக்கப்படான் என்பது கருத்து. நாரம்-மக்கட் கூட்டம். இவர்த்தான். வெறுக்கப்பட்டவன். இவர்த்தான் என்பது இப்பொருளைத் தாராது எனினும் வேறுவகையிற் பொருள் கொள்ள வியலாது போலத் தோன்றுகிறது. உவர்த்தான் என்பது பிழையாக இவர்த்தான் என எழுதப்பட்டிருக்கும் என்னும் ஐயம் நிகழ்கிறது. ஆய்ந்து கொள்க. புல் என்பது, மேல் கீழ் என்பன மேன்மக்கள் கீழ் மக்களை யுணர்த்துவது
|