(க-து) மங்கையரை வாழ்க்கைத் துணையாக மணந்து வாழ்வதே சிறந்த வாழ்வு. அவ்வாழ்வே இன்பந் தருவது. அவரைக் கூடாத வாழ்வு தனிமையுடையது; துன்ப வாழ்வு. (வி-ம்) தூவி-மென்மையுடையது; தும்பைப் பூவும் மென்மையுடையது. இவ்விரண்டும் நெருஞ்சி முள்ளாகவும், நீர் முள்ளியின் முள்ளாகவும் தோன்றும் மகளிர் அடிக்கு. அத்தகைய மெல்லிய தன்மையுடைய குறுந்தொடியார் எனக் கூட்டுக. "அனிச்சமும் அன்னத்தின் றூவியு மாதர், அடிக்குநெருஞ்சிப்பழம்" என்ற வள்ளுவர் வாக்கினை நோக்கிடுக. தும்பையலர் நீர்முள்ளி:எதிர் நிரனிறையாகக் கொள்க. தூவியின் மிதிக்கினும் தும்பை மலரின் மிதிக்கினும் நெருஞ்சி, நீர் முள்ளிமேல் மிதித்ததுபோல அழுத்தப்பட்டு வருந்தும் இயற்கையையுடைய அடியென விரித்துக் கொள்க. அன என்பது உவமையுருபு. காவி சேல் அன எனப் பின் கூட்டுக "ஆவிக்கு இனியர்" என்ற குறிப்பினால் "ஆடவரது" என்ற சொல் வருவிக்கப்பட்டது. இணைசேரார் தனிமைக்குக் கரி என்று கொள்க. உலக வாழ்வு வாழ்க்கைத் துணையோடு கூடிவாழ்வதேயாம். தனித்து வாழ்வது வாழ்வாகாது. இன்பத்திற்காகவே இவ்வுலகம் படைக்கப்பட்டது. குளிர்ந்தது; இடமகன்றது; பெரியது. இத்துணைச் சிறப்புடைய வுலகத்தில் தனிமை வாழ்வு தக்கதன்று என்ற கருத்துத் தோன்றும்படி "ஈர்ங்கண் மா ஞாலம்" எனச் சிறப்பித்தார். விலங்குகளும், பறவைகளும் கூடியே வாழ்கின்றன. ஆதலால் அவர்களே அவர்களுக்குச் சான்றாவர் என்பது தோன்ற "அவர் ஓர் கரி" என்றார். வேறு சான்று உலகிற் காட்ட வியலாது என்பது கருத்து. (கு-பு) குறுமை+தொடியார்: பண்புத் தொகை. நெருஞ்சிக்காய்: ஆகுபெயர்; முள்ளையுணர்த்தலால் நீர் முள்ளியும் அது. சேரார்:எதிர்மறை வினையாலணையும் பெயர். ஈரம்+கண்=ஈர்ங்கண் என அம் குறைந்து வருமொழிக் கினவெழுத்துப் பெற்று நின்றது. இது பண்புத் தொகை.
|