இன்பத்துப் பால் கற்பியல் அதிகாரம் 116. பிரிவாற்றாமைஅஃதாவது, காதலன் காதலியை வரைந்துகொண்ட பின், தலைமகள் இல்லத்திலிருக்கத் தலைமகன் அறம்பொருள் பற்றித் தன் தொழிற்கேற்ப ஒரு வினைமேற்கொண்டு ஆயிடையுஞ் சேயிடையும் பிரிந்து செல்லுங்கால், அவள் அப்பிரிவைப் பொறாதிருத்தல். அது பிரிவுணர்த்திய தலைமகனுக்குத் தோழிகூறல், அவளுக்குத் தலைமகள் தானே அவன் குறிப்பறிந்து கூறல், பிரிவுணர்த்திய விடத்துக்கூறல், பின் ஆற்றுவிக்குந் தோழிக்குத் தலைமகள் மறுத்துக்கூறல் என நால்வகையாற் கூறப்படும். இஃது அறநூலாதலால், இலக்கண நூல்களிலுங் கோவைகளிலுங் கூறப்படும் பரத்தையிற் பிரிவு இங்கு விலக்கப்பட்டதாம். இதையறியாது "அறம் பொருளின்பங்களின் பொருட்டு "என இன்பத்தையுஞ் சேர்த்துக் கூறினார் பரிமேலழகர். கற்பொடு பொருந்தாத பிறனில் விழைதல் அறத்துப்பாலிலும், வரைவின் மகளிர் தொடர்பு பொருட்பாலிலும் , கூறி விலக்கப்பட்டமை காண்க. புலவிமுதலிய மூன்றதிகாரங்களிலுங் கூறப்பட்டுள்ள பரத்தைமைக் குறிப்புக்களெல்லாம், தலைமகள் தன் மடமையால் தலைமகன் மீது ஏற்றிக்கூறிய இட்டேற்றமேயன்றி வேறல்லவென்க. பிரிவு: தூது, போர், சந்துசெய்தல், நாடுகாவல், பொருளீட்டல் என நோக்கம்பற்றிப் பலதிறப்படும். ஆரிய வேதமும் அதன் வழிப்பட்ட நூல்களுங் கற்கச்செல்லும் ஓதற்பிரிவு தமிழருக்குரிய தன்று. 'வேந்தற்குற்றுழி' என்னும் வேளாண் தலைவர் வேளிர் பிரிவும், 'வேந்துவிடுதொழில்' என்னும் வேளாளர் பிரிவும், போருள் அடங்கும். |