இன்பத்துப் பால் கற்பியல் அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல்அஃதாவது, தொலைவிடைப் பிரிவின்கண் தலைமகனுந் தலைமகளும் வேட்கைமிகுதியினால் ஒருவரையொருவர் காண்டற்கு விரைதல். இதனுள் தலைமகள் கூற்று நிறையழிவால் நிகழ்ந்ததாகலின், நிறை யழிதலின் பின் வைக்கப்பட்டது. "தலைமகன் பிரிவும் தலைமக ளாற்றாமையும் அதிகாரப்பட்டு வருகின்றமையின், இருவரையுஞ் சுட்டிப் பொதுவாகிய பன்மைப் பாலாற் கூறினார். பிறரெல்லாம் இதனைத் தலைமகனை நினைந்து தலைமகள் விதுப்புற லென்றார். சுட்டுப்பெயர் சொல்லுவான் குறிப்பொடு கூடிய பொருளுணர்த்துவதல்லது தானொன்றற்குப் பெயராகாமையானும், கவிகூற்றாய அதிகாரத்துத் தலைமகன் உயர்த்தற் பன்மையாற் கூறப்படாமையானும், அஃதுரையன்மை யறிக". என்று பரிமேலழகர் இவ்வதிகார முகவுரையிற் கூறியது சரியே. 'பிறர்' என்றது மணக்குடவ பரிப்பெருமாளரை. 'அவர்வயின் விரும்பல்' என்பது காலிங்கர் கொண்ட பாடம். |