வானம் வறக்குமேல் - மழை பெய்யாவிடின்; ஈண்டு வானோர்க்கும் பூசனைசிறப்பொடு செல்லாது - இவ்வுலகில் தேவர்க்கும் அன்றாடு பூசையும் ஆட்டைவிழாவும் நடைபெறா. அன்றாடு பூசை, கதை நிகழ்ச்சி குறியாதும் கொண்டாட்ட மின்றியும் ஒரு சிலரான அக்கம் பக்கத்தார் மட்டும் கலந்தும் கலவாமலும், வழக்கம்போற் சிற்றளவான வழிபாடாகக் கோவிற்குள் மட்டும் நடைபெறுவது; ஆட்டைவிழா ஒருகதை நிகழ்ச்சி குறித்தும் கொண்டாட்டத்துடனும் நாட்டு மக்களையெல்லாம் வரவழைத்தும், பேரளவாக ஊர்வலஞ்செய்து நடைபெறுவது. உம்மை சிறப்பும்மை. பூசுதல் = கழுவுதல், தெய்வப் படிமையை நீரால் துப்புரவாக்குதல். பூசு-பூசி. பூசித்தல்=பூச்சாத்தியும் தேங்காய் பழம் முதலியன படைத்தும் வழிபடுதல். உழவு என்பது பயிர்த்தொழிலின் பின்வினைகளையும் குறித்தல்போல், பூசித்தல் என்பதும் வழிபாட்டின் பின்வினைகளையும் குறித்தது. பூசி-பூசை. ஒ.நோ: ஆசு (பற்று) -- ஆசி (அவாவு)-ஆசை (அவா).பூசி-பூசனை,பூசனம். ஐ,அனை,அனம் என்பன தமிழ் ஈறுகளே. பூசை-பூசாரி. ஆரி தலையாரி என்பதிற்போல் ஓர் ஈறு. பூசாச்சாரி (பூசை+ஆச்சாரி) என்னும் வழக்கு வடமொழியிலுமில்லை. பூ செய் என்பது பூசை என்றாயிற்றென்று கொள்வது பொருந்தாது. பூசி-பூஜ் (வ.), பூசை-பூஜா(வ.), பூசனம்-பூஜன(வ.), பூசனை-பூஜனா(வ.). வேத ஆரியர்க்கு வேள்வி வேட்டலேயன்றிப் படிமைப்பூசையும் கோவில் வழிபாடும் இல்லை. பூஜ் என்னும் சொல்லும் வேதத்திலில்லை. பாரதம் முதலிய பிற்கால வடபனுவல்களிலேயே அது வழங்குகின்றது.
|