பக்கம் எண் :

காமம் வெகுளி மயக்க மிவை மூன்ற
னாமங் கெடக்கெடு நோய்.

 

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெட - ஒக வொழுக்கத்தில் முதிர்ந்தவர்க்கு விருப்பு, வெறுப்பு, அறியாமை என்னும் இக்குற்றங்கள் முன்றும் தம் பெயருங் கூடத்தோன்றாவாறு முற்றக் கெடுதலால்; நோய்கெடும் - அவற்றின் விளைவாகிய வினைப்பயன்களும் அறவே கெடும்.

தொடக்கமிலியாகிய அறியாமையும், அது பற்றி யான்எனமதிக்கும் அகப்பற்றும், அது பற்றி எனக்கிதுவேண்டு மென்னும் அவாவும், அது பற்றி அப்பொருட்கண் செல்லும் ஆசையும், அது பெறாவழியெழுஞ் சினமும் என வடநூலார் கூறும் குற்றம் ஐந்தனுள், அகப்பற்றை அறியாமைக் கண்ணும் அவாவை ஆசைக் கண்ணும் திருவள்ளுவர் அடக்கிக் காமவெகுளி மயக்கமென மூன்றாகக் கூறியதாகப் பரிமேலழகர் உரைப்பர். இது பாட்டிக்கு நூல் நூற்கப் பேர்த்தி கற்றுக் கொடுத்தாள் என்பது போன்றதே. வேள்வி யொன்றே யியற்றும் ஆரியர் ஒகமுறை கற்றது தமிழரிடத்திலேயேயாதலின் , தமிழ் நூலார் கூறும் முக்குற்றங்களையே வடநூலார் ஐந்தாக விரித்தார் என அறிக. வீடுபெறுவானின் முழுத்தூய்மையைக் குறிக்க 'மூன்றன் நாமங்கெட' என்றார். நாமமும் என்னும் இழிவு சிறப்பும்மை தொக்கது. 'நோய்' என்பது வகுப்பொருமை.

'நாமம்' என்பது அச்சம் என்று பொருள்படின் தென்சொல்லும், பெயர் என்று பொருள்படின் வடசொல்லும் ஆகும். பெயர்ப் பொருள் குறிக்கவும் இங்கு வடசொல்லை யாளத்தேவையில்லை. அக்காலத்தில் மொழியாராய்ச்சியும் தென்மொழி -வடமொழிப் போராட்டமும் இன்மையால் , திருவள்ளுவர் தம் கருத்தைத் தமிழொழுக்கத்தின் சிறப்பை நிலைநாட்டுவதிற் செலுத்தினாரேயன்றி மொழித்தூய்மை போற்றுவதிற் செலுத்தவில்லை. மேலும், அக்காலத்தில் தமிழர் அயிர்க்குமளவு வடசொற்கள் தமிழிற் பெருவாரியாகக் கலக்கவில்லை. ஒருசில சொற்களே கலந்திருந்ததால் அவை தமிழறிஞர் கண்ணைக் கவர்ந்தில. அல்லாக்கால்,

காமம் வெகுளி மயக்க மிவற்றின்பேர்

தாமுங் கெடக்கெடு நோய்.


என்றே திருவள்ளுவர் யாத்திருப்பார்.