பக்கம் எண் :

எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு.

 

எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்- மாந்தர் பொதுவாக இலக்கமென்று சொல்லுவதும் மற்ற எழுத்தென்று சொல்லுவதுமான இருவகை நூற்கலைகளையும்; வாழும் உயிர்க்குக் கண் என்ப- இவ்வுலகிற் சிறப்பாக வாழவிரும்பும் மக்களுயிர்க்குக் கண்ணென்று சொல்லுவர் அறிந்தோர்.

அறம் முதலிய நாற்பொருளாயமையும் எல்லாக்கலைகளும் அறிவியல்களும், எண்ணூலும் இலக்கியமும் என இருவகுப்பாக வகுக்கப்பெறும். எண்ணூலென்பது கணக்கும் (Arithmetic) கணிதமும் (Mathematics). அதுசிறப்பாக எண்களால் அறியப்பெறும் இலக்கியமென்பது மற்றெல்லா அறிவுத்துறைகளும் ஆம். அது பெரும்பாலும் எழுத்தை உறுப்பாகக் கொண்ட சொற்களால் அறியப்பெறும். இவ்விருவகை நூல்வகுப்புக்களும், எல்லாப்பொருள்களையும் அறிதற்குக் கண்போல் அல்லது கண்ணாடிபோல் உதவுதலாற் கண்ணெனப்பட்டன. இவை எழுதப்பட்ட வடிவிற் கட்புலன் வாயிலாகவும் அறியப்படும். கட்புலவடிவில் இலக்கம் (numerical figure) என்னும் வரிவடிவு எண்ணூலையும்; எழுத்து (character) என்னும் வரிவடிவு இலக்கியத்தையும், வேறுபடுத்திக்காட்டும்.

நூல்வாயிலாகப் பொருள்களை உண்மையாகக் கண்டறிவது. அகக்கண்ணேயாயினும், அதற்குக் கண்ணாடிபோல் உதவுங்கருவித் தன்மை நோக்கி இருவகை நூல்களும் கண்ணெனச் சார்த்திக்கூறப் பட்டன. இதை, குருடர்க்கும் முதியோர்க்கும் கண்ணுங்காலும் போல் உதவுங்கோலைக் கண்ணாகவுங் காலாகவும் கூறியது போற்கொள்க." கோற்கண்ண ளாகுங்குனிந்து "என்பது நாலடியார் (கஎ)."முக்காலுக் கேகாமுன்" என்றார் காளமேகனார்.

ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதஞ் சாலம்

வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள.


என்றிரங்குவது ஒரு பழந்தனியன். ஆயின், எண்ணூல், கணக்கியல் முதலிய கணக்கு நூல்களும் ஏரம்பம் முதலிய கணிதநூல்களும் ஆரியரால் அழிக்கபட்டு விட்டன என்பதே, ஆராய்ச்சியாளர் கருத்தாம்.

'என்ப' என்னும் மூன்றனுள், முன்னையவிரண்டும் அஃறிணைப் பன்மைப்பெயர்; பின்னது உயர்திணைப்பன்மைவினை. 'வாழ்தல்' என்பதை "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்" என்பதிற் போலக் கொள்க. "எண்ணும் மெழுத்துங் கண்ணெனத்தகும்". (கொன்றை 7) என்பது இக்குறட் சுருக்கமே.