பக்கம் எண் :

மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு
மினந்தூய்மை தூவா வரும்.

 

மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - ஒருவனை நல்லவனென்று சொல்லுதற் கேதுவான உளத்தூய்மையும் செயல் தூய்மையும் ஆகிய இரண்டும்; இனம் தூய்மை தூவா வரும் - இனத் தூய்மையைப் பற்றுக் கோடாகக் கொண்டு தோன்றும்.

மனத்தூய்மையாவது தனக்குத் தீதென்று தோன்றுவதைப் பிறர்க்குச் செய்யாமைக்கும், நன்றென்று கண்டதை அவர்க்குச் செய்தற்கும், ஏதுவான அறப்பான்மை, அல்லது அன்புநிலை. மனத்தூய்மையால் வினைத்தூய்மையுந்தானாக அமையுமேனும், பட்டறி வில்லாதவர்க்கு வினைசெய்யும் முறை தெரியாமையின், அவரை அதிற் பயிற்று வதற்கும் இனத்தூய்மை வேண்டியதாயிற்று, இரு தலைப்பட்ட மனத்தையும் வினையையுங் குறிக்கவே இடைப்பட்ட சொல்லும் அடங்கிற்று. இனி மனத்தைப் பொறியாகக்கொண்டு, வினை என்பது முக்கரணவினை என்று கூறினும் பொருந்தும். 'செய்வினை' என்பது செய்யும் வினையெல்லாம் என்று பொருள்பட நின்றது. ஆறாம் வேற்றுமைத் தொகையாக வந்து வலிமிக்குப்புணர வேண்டிய தொடர்கள், இன்னோசை பற்றி எழுவாய்த் தொடராக மாறி மெலிமிக்கும் இயல்பாகப் புணர்ந்தும் நின்றன.