பக்கம் எண் :

பொருட்பால்
அரசியல்

அதிகாரம் 55. செங்கோன்மை

அஃதாவது , அரசனாற் கையாளப்பெறும் நேர்மையான ஆட்சி முறை . நேர்மையான ஆட்சி நேரான கோல்போலிருத்தலால் செங்கோல் எனப் பட்டது . குடிகள் ஆக்கள் போலவும் அரசன் ஆயன் போலவுமிருத்தலால் , அரசன் கோன் எனப்பட்டான் . கோ = ஆ (பசு) . கோவன் = (க) ஆயன்.

"கோவனிரை மீட்டனன்" (சீவக. 455)
(உ) அரசன், "கோவனும் மக்களும்" (சீவக . 1843)

கோவன் - கோன் - கோ = அரசன் . கோன் = ஆயன் , அரசன் , தலைவன் . அரசன் கையிலுள்ள கோல் ஆடுமாடு மேய்க்கும் இடையன் கையிலுள்ள கோல் போன்றது . அச்சின்னத்தின் பெயர் அரசனையாவது அவனாட்சியையாவது குறிக்கும் போது சின்னவாகு பெயராம் . கோலின் தன்மை கோன்மை . செங்கோலின் தன்மை செங்கோன்மை . செம்மை = நேர்மை . கோணாமை , நெறியினின்றும் விலகாமை .

"வடநூலாரும் தண்டமென்றார்" , என்றார் பரிமேலழகர் . வடநூலில் தண்டம் என்பது தண்டிக்கும் அதிகாரத்தைக் குறிக்குமேயன்றி , தமிழிற்போல் அரசாட்சியைக் குறிக்காது . மேலும் , அச்சொல்லும் தென்சொல்லே.

செங்கோன்மை சோர்வில்லாத அரசனாலேயே கையாளப்படத் தக்கதாதலின் , இது பொச்சாவாமையின் பின் வைக்கப்பட்டது .

 

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்
தேர்ந்துசெய் வஃதே முறை.

 

ஓர்ந்து - தன் குடிகள் செய்த குற்றங்களை ஆராய்ந்து ; யார்மாட்டும் கண்ணோடாது - எவரிடத்தும் சிறப்பாக அன்பு கொள்ளாது ; இறை புரிந்து - நடுநிலை பொருந்தி ; தேர்ந்து - அக்குற்றங்கட்கேற்ற தண்டனைகளை அறநூலறிஞரொடு நூலுத்தி பட்டறிவொடு பொருந்தத் தீர்மானித்து ; செய்வஃதே முறை - அவற்றை நிறைவேற்றுவதே செங்கோல் முறையாம்.

நடுநிலை இறைக்கு (அரசனுக்கு) இன்றியமையாத குணமாகலின் அதை 'இறை' யென்றும் , உயிரினுஞ் சிறந்தாரிடத்தும் கண்ணோட்டம் தகாதென்பார் 'யார் மாட்டும்' என்றும் கூறினார் . இறைமை யென்பது இறையெனக் குறைந்தும் , செய்வது என்பது செய்வஃது என விரிந்தும் நின்றன. செய்யுளமைதி நோக்கி. இதனால் செங்கோன்மை யிலக்கணங் கூறப்பட்டது.