ஒருவற்கு உரம் உள்ள வெறுக்கை - ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே ; அஃது இலார் மரம் -அவ்வூக்கமிகுதியில்லாதவர் மக்களாகார், மரங்களாவர்; மக்கள் ஆதலே வேறு -மக்கள் வடிவிலிருப்பதே இம் மரங்களுக்குக் குலமரங்களொடு வேற்றுமையாம். உயர்விற்கும் நன்மைக்கும் ஏதுவான வினைமுயற்சி யின்மையின் , அதை இயங்காமையாகக் கொண்டு ' மரம் ' என்றார். உள்ளத்தால் இயங்காது காலால் மட்டும் இயங்குவது மக்களியக்க மன்றென்பது கருத்து . மரங்கள் இயங்காவிடினும் ,அவற்றுள் ஒருசாரன வேர் முதல் விதை வரை இருதிணையுயிரிகட்கும் உணவாகவும் மருந்தாகவும் பயன் படுவனவாகும். இவ்விருவகையிலும் பயன்படாதனவும் காய்ந்தால் விறகாகவேனும் உதவமாற்போகா.இப்பயன்பாடு ஊக்கமில்லா மாந்தர்க்கின்மை, 'மக்களாதலேவேறு ' என்று குறித்த வடிவு வேறுபாட்டாற் குறிப்பாகப் பெறப்பட்டதாம்;' மரம் ' வகுப்பொருமை. ஏகாரம் பிரிநிலை.
|