பக்கம் எண் :

கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்.

 

கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய் - நண்பராயிருந்து தாம் சொன்னதை ஏற்றுக்கொண்டவர் பின்பு தம்மைவிட்டுப் பிரியாவாறு வயப்படுத்தும் தன்மைகளை விரும்பித்தழுவி; கேளாரும் வேட்ப மொழிவது -பகைவராயிருந்து தம் சொல்லை ஏற்றுக் கொள்ளாதவரும் பின்பு அப்பகைமை நீங்கி நட்பை விரும்பும் வண்ணம் சொல்வதே; சொல் ஆம் - அமைச்சர்க்குரிய சொன்முறையாம்.

கேட்டார்ப் பிணிக்குந் தகைகள்,
'சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை ஆழமுடைத் தாதல்
முறையின் வைப்பே உலகமலை யாமை
விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த
தாகுதல் ----------------- எனும் பத்தே.' (நன். பொதுப்பாயிரம்,12)


அவாவுதல் கேட்பாருள்ளத்தை இறுகப் பிணிக்க வேண்டுமென்னும் நோக்கத்தைச் சிறப்பாகக் கொள்ளுதல். கேட்டல் என்னும் வினை ஏற்றுக் கொள்ளற் பொருள் கொள்வதை, சொன்ன சொற்கேளாதவன் என்னும் வழக்கு நோக்கி யுணர்க. 'அவாய்--------- மொழிவது' என்று முடியும். 'கேட்டார்,' 'கேளார்' என்பவற்றிற்கு, வினாவினார் வினாவாதார் என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும்; நூல் கேட்டார் கேளாதார் என்று காலிங்கரும்; உரைப்பர். கேட்டார் என்பதனைக் கேள்வியுடையார் எனினும் அமையும்; சொல்லக் கேட்டார் எனினும் அமையும், என்றும் உரைப்பர் பரிப்பெருமாளர். 'தகையவாய்' என்பதற்கு, தகுதியையுடையவாய் என்றும், பண்புகளை யுடையவாய் என்றும், இயல்பினை யுடையவாய் என்றும் உரைப்பின், 'மொழிவன' என்னும் பாடங்கொள்க. 'கேளாரும்' இறந்தது தழுவிய எச்சவும்மை. 'ஆம்' பிரித்துக் கூட்டப்பட்டது.