பக்கம் எண் :

உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள் பெருந்தேர்க்
கச்சாணி யன்னா ருடைத்து

 

உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து-உருண்டோடுகின்ற பெரிய தேர்க்கு இன்றியமையாத சிறிய அச்சாணிபோல, வினைத்திறம் மிக்க சிற்றுடம்பினரை இவ்வுலகம் கொண்டுள்ளது; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - ஆதலால், அத்தகையோரை வடிவின் சிறுமை நோக்கித் தாழ்வாக எண்ண வேண்டா.

உருவின் சிறுமை எள்ளாமை வேண்டும் என்பதனாலும் உவமத்தாலும் பெறப்பட்டது. உருளுதல் தேர்ச்சக்கரத்தின் தொழில். சினைவினை முதல்வினையாக நின்றது. பெருந்தேர் ஏழுதட்டுக்களைக் கொண்ட முழுத்தேர். அச்சு - சக்கரங் கோத்த குறுக்கு உத்தரம். அச்சாணி - சக்கரங் கழலாதவாறு அச்சின் கடைசியிற் செருகும் ஆணி. அதனாற் கடையாணி யெனவும்படும். அச்சாணி சிறிதாயிருந்தும் பெரிய கோயில் தேரையும் தாங்குவதும் அதன் இயக்கத்திற்கு இன்றியமையாததுமான சிறப்புடையது. "அச்சாணியில்லாததேர் முச்சாணும் ஓடாது." பெருந்தே ரோட்டத்திற்கு இன்றியமையாத சிறிய அச்சாணிபோல், பெருநாட் டாட்சிக்கும் இன்றியமையாத சிற்றுருவப் பேராற்ற லமைச்சர் உளர். அவரை வடிவு பற்றி இகழாது, அவர் மதிநுட்பமும் வினைத்திட்பமும் நோக்கி ஆட்சித் துணையாக அரசன் அமர்த்திக் கொள்க என்பதாம்.