பொருட்பால் உறுப்பியல் அதிகாரம் 69. தூதுஅஃதாவது அரசரைப் பொருத்தலும் பிரித்தலும் பேணலும் பற்றி வேற்றரசரிடம் அரசரும் அமைச்சரும் முனிவரும் புலவரும் சென்று கூறும் செய்தி. அமைச்சர் செல்வதே பெரும்பான்மை. புலவர் சென்றதற்கு, ஓளவையார் அதிகமான் பொருட்டுத் தொண்டைமானிடம் தூது சென்றதை எடுத்துக் காட்டாகக்கொள்க. தூது என்னும் சொல் தூதுச் செய்தியையும் அதனைச் சொல்வாரையுங் குறிக்கும். வகுத்துரைப்பார், வழியுரைப்பார் எனத்தூதர் இருவகையர். வேற்றரசன் வினாக்கட் கெல்லாம் விடையிறுக்கும் அறிவாற்றலும் உரிமையும் பெற்றவர் வகுத்துரைப்பார்; அவ்வாற்றலின்றிச் சொல்லிவிடுத்த செய்தியை மட்டுஞ் சொல்பவர் வழியுரைப்பார். பிரித்தல் பொருத்தல் பேணல் முதலிய சூழ்ச்சிவன்மையும், அவற்றிற்கேற்ற சொல்வன்மையும் உடைய அமைச்சர்க்கும், அவர் போன்ற பிறருக்கும், தூதுரைத்தல் பொதுவினையாதலின், இது அமைச்சர்க்குரிய வினைசெயல் வகையின் பின் வைக்கப்பட்டது. காதல் வாழ்க்கையில், தலைவனுந் தலைவியும் ஒருவர்க் கொருவர் தூது விடுப்பது, இன்பத்துப்பாற் கன்றிப் பொருட்பாற் குரியதன்றென அறிக. |