பக்கம் எண் :

உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத்
தொல்படைக் கல்லா லரிது.

 

தொலைவிடத்து உலைவிடத்து ஊறு அஞ்சாவன்கண்-நீண்ட நேரம் பொருது களைத்த விடத்தும், தோல்வி நேர்ந்தால் மேல் நேரக்கூடியவற்றிற்கெல்லாம் அஞ்சாது நின்று பொரும் கடுமறம்; தொல் படைக்கு அல்லால் அரிது-அரசர்க்கு வழி வழியாகத் தொடர்ந்து வரும் நிலைப்படைக்கு அல்லாமல் வேறுவகைப் படைக்கு உண்டாகாது.

நிலைப்படை கூலிப்படை யென்றும், நாட்டுப்படை காட்டுப்படை யென்றும், துணைப்படை பகைப்படை யென்றும் படைகள் மூவேறு வகையில் இவ்விரண்டாக வகுக்கப்படும். கூலிப்படை போர்ச்சமையத்திற்கு மட்டும் கூலிக்கு அமர்த்திக் கொள்வது. நாட்டுப்படை செங்குந்தர் கைக்கிளையர் படை போல்வது. காட்டுப்படை கள்ளர் மறவர் படை போல்வது. நிலைப்படை என்றும் நாட்டுப் படையாகவே யிருக்கும். அது மூலப்படையெனவும் படும். மூலம் என்னும் தென்சொல்லின் திரிபே மௌலம் என்னும் வடசொல்லும். துணைப்படை என்பது தனித்தவிடத்து நட்பரசர் படையையும் போர்க்களத்தில் பகைப்படையல்லாத தன்படைத் தொகுதியையுங் குறிக்கும். வழிமுறைப் பண்பு வரவர வளர்ந்தும் இயற்கையாக அமைந்தும் இருக்குமாதலாலும், வாழ்நாள் முழுவதும் உணவளித்துக் காத்த அரசனுக்கு நன்றியறிவாகச் செஞ்சோற்றுக் கடன் கழித்தல் மறவ ரியல்பாதலாலும், 'தொல்படைக் கல்லா லரிது' என்றார்.

"சிறந்த திதுவென்னச் செஞ்சோறு வாய்ப்ப
மறந்தரு வாளம ரென்னும் - பிறங்கழலுள்
ஆருயி ரென்னும் அவிவேட்டார் ஆங்கஃதால்
வீரியரெய் தற்பால வீடு.

(பு,வெ 8:30)

"வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்டனையும்-கொல்களிறும் மாவும்" கொடுத்துத் தொல்படையைப் போற்றுக என்பது குறிப்பு.
இழிவு சிறப்பும்மை தொக்கது.