பக்கம் எண் :

அறத்துப் பால்
இல்லறவியல்

அதிகாரம் 9. விருந்தோம்பல்

அஃதாவது, இல்லறம் நடத்தும் கணவனும் மனைவியும், அன்புடையவராயிருந்து, தம் இல்லறத்திற்கேனும் ஊருக்கேனும் புதிதாக வந்த உயர்ந்தோரையும், அவர் தங்கும் சில பல நாட்கட்கு அவர் தகுதிக்கும் தம் நிலைமைக்கும் ஏற்ப, உறையுளும் சிறந்தவூணும் உதவிப் பேணுதல்.

வேற்றூரிலிருந்து வந்த உறவினர்க்கும் நண்பர்க்கும் இங்ஙனமே சிறப்பு நடக்குமேனும், அது அறத்தின்பாற் படாது வழக்கமும் கடமையும் பற்றியதாகும். அதனால், அதை உறவாடல் என்றும் நட்பாடல் என்றும் பிரித்துக் கூறல் வேண்டும்.

விருந்தோம்பல் என்னும் சிறந்த அறம், ஆரியர் தென்னாடு வந்து பிறப்பொடு தொடர்புற்ற குலப் பிரிவினையால் தமிழரின் ஒற்றுமையைச் சிதைத்தபின், தமிழகத்து அடியோடு நின்றுவிட்டது.

விரும்புவது என்னும் வேர்ப் பொருளைக் கொண்ட விருந்து என்னுஞ் சொல், பின்பு விரும்பப் பெற்ற புதியவரையும் அவர் நிலைமையான புதுமையையும் அவர்க்களிக்கும் சிறந்த வுணவையும் முறையே குறித்து, இன்று உறவினர்க்கும் நண்பர்க்கும் படைக்கும் சிறந்த வுணவையே குறிக்கும் இழிபடைந்துள்ளது. பண்டைவிருந்தினர் புதியவராயிருந்ததினால் புதுவர் எனவும் பட்டார்.

"புலம்புசே ணகலப் புதுவி ராகுவிர்" (மலைபடு.412)

 

இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

 

இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - கணவனும் மனைவிபும் தம் இல்லத்தின்கண் இருந்து தம்மையும் தம் மக்களையும் தம் பொருள்களையும் பேணிக்காத்து வாழ்வதெல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு - விருந்தினரைப் பேணி அவருக்குப் பலவகையிலும் நன்றி (உபகாரம்) செய்தற் பொருட்டே.

இக் காலத்திற்போல் உண்டிச் சாலைகளும் தங்கல் விடுதிகளுமில்லாத பண்டைக் காலத்தில், பணம் பெற்றேனும், இல்லறத்தாரையன்றி விருந்தினரைப் பேண ஒருவரு மின்மையின், இல் வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் விருந்தோம்பலே என்றார். ' விருந்து ' பண்பாகு பெயர்.