அறத்துப் பால் இல்லறவியல் அதிகாரம் 9. விருந்தோம்பல்அஃதாவது, இல்லறம் நடத்தும் கணவனும் மனைவியும், அன்புடையவராயிருந்து, தம் இல்லறத்திற்கேனும் ஊருக்கேனும் புதிதாக வந்த உயர்ந்தோரையும், அவர் தங்கும் சில பல நாட்கட்கு அவர் தகுதிக்கும் தம் நிலைமைக்கும் ஏற்ப, உறையுளும் சிறந்தவூணும் உதவிப் பேணுதல். வேற்றூரிலிருந்து வந்த உறவினர்க்கும் நண்பர்க்கும் இங்ஙனமே சிறப்பு நடக்குமேனும், அது அறத்தின்பாற் படாது வழக்கமும் கடமையும் பற்றியதாகும். அதனால், அதை உறவாடல் என்றும் நட்பாடல் என்றும் பிரித்துக் கூறல் வேண்டும். விருந்தோம்பல் என்னும் சிறந்த அறம், ஆரியர் தென்னாடு வந்து பிறப்பொடு தொடர்புற்ற குலப் பிரிவினையால் தமிழரின் ஒற்றுமையைச் சிதைத்தபின், தமிழகத்து அடியோடு நின்றுவிட்டது. விரும்புவது என்னும் வேர்ப் பொருளைக் கொண்ட விருந்து என்னுஞ் சொல், பின்பு விரும்பப் பெற்ற புதியவரையும் அவர் நிலைமையான புதுமையையும் அவர்க்களிக்கும் சிறந்த வுணவையும் முறையே குறித்து, இன்று உறவினர்க்கும் நண்பர்க்கும் படைக்கும் சிறந்த வுணவையே குறிக்கும் இழிபடைந்துள்ளது. பண்டைவிருந்தினர் புதியவராயிருந்ததினால் புதுவர் எனவும் பட்டார். "புலம்புசே ணகலப் புதுவி ராகுவிர்" (மலைபடு.412) |