11. விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக்
களியாதான் காவாது உரையும், தெளியாதான்
கூரையுள் பல் காலும் சேறலும்,-இம் மூன்றும்
ஊர் எலாம் நோவது உடைத்து.
உரை
   
12. தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன்;
வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்;
கோளாளன் என்பான் மறவாதான்;-இம் மூவர்
கேள் ஆக வாழ்தல் இனிது.
உரை
   
13. சீலம் அறிவான் இளங்கிளை; சாலக்
குடி ஓம்ப வல்லான் அரசன்; வடு இன்றி
மாண்ட குணத்தான் தவசி;-என மூவர்
யாண்டும் பெறற்கு அரியார்.
உரை
   
14. இழுக்கல் இயல்பிற்று, இளமை; பழித்தவை
சொல்லுதல் வற்றாகும், பேதைமை; யாண்டும்
செறுவோடு நிற்கும், சிறுமை;-இம் மூன்றும்
குறுகார், அறிவுடையார்.
உரை
   
15. பொய் வழங்கி வாழும் பொறியறையும், கை திரிந்து
தாழ்விடத்து நேர் கருதும் தட்டையும், ஊழினால்
ஒட்டி வினை நலம் பார்ப்பானும்,-இம் மூவர்
நட்கப் படாஅதவர்.
உரை
   
16. மண்ணின் மேல் வான் புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள்-பெற்றானும், உண்ணு நீர்க்
கூவல் குறை இன்றித் தொட்டானும்,-இம் மூவர்
சாவா உடம்பு எய்தினார்.
உரை
   
17. மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும், கற்புடையாள்
பூப்பின்கண் சாராத் தலைமகனும், வாய்ப் பகையுள்
சொல் வென்றி வேண்டும் இலிங்கியும்,-இம் மூவர்
கல்விப் புணை கைவிட்டார்.
உரை
   
18. ஒருதலையான் வந்துறூஉம் மூப்பும், புணர்ந்தார்க்கு
இரு தலையும் இன்னாப் பிரிவும், உருவினை
உள் உருக்கித் தின்னும் பெரும் பிணியும்,-இம் மூன்றும்
கள்வரின் அஞ்சப்படும்.
உரை
   
19. கொல் யானைக்கு ஓடும் குணமிலியும், எல்லில்
பிறன் கடை நின்று ஒழுகுவானும், மறம் தெரியாது
ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும்,-இம் மூவர்,
நாடுங்கால், தூங்குபவர்.
உரை
   
20. ஆசை பிறன்கண் படுதலும், பாசம்
பசிப்ப மடியைக் கொளலும், கதித்து ஒருவன்
கல்லான் என்று எள்ளப்படுதலும்,-இம் மூன்றும்
எல்லார்க்கும் இன்னாதன.
உரை