91. பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல், உயிரை
இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல், மறுவந்து
தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல்,-இம் மூன்றும்
மன்னா உடம்பின் தொழில்.
உரை
   
92. விழுத் திணைத் தோன்றாதவனும், எழுத்தினை
ஒன்றும் உணராத ஏழையும், என்றும்
இறந்துரை காமுறுவானும்,-இம் மூவர்
பிறந்தும் பிறவாதவர்.
உரை
   
93. இருளாய்க் கழியும் உலகமும், யாதும்
தெருளாது உரைக்கும் வெகுள்வும், பொருள் அல்ல
காதற்படுக்கும் விழைவும்,-இவை மூன்றும்
பேதைமை, வாழும் உயிர்க்கு.
உரை
   
94. நண்பு இலார் மாட்டு நசைக் கிழமை செய்வானும்,
பெண்பாலைக் காப்பு இகழும் பேதையும், பண்பு இல்
இழுக்கு ஆய சொல்லாடுவானும்,-இம் மூவர்
ஒழுக்கம் கடைப்பிடியாதார்.
உரை
   
95. அறிவு அழுங்கத் தின்னும் பசி நோயும், மாந்தர்
செறிவு அழுங்கத் தோன்றும் விழைவும், செறுநரின்
வெவ் உரை நோனா வெகுள்வும்;-இவை மூன்றும்
நல் வினை நீக்கும் படை.
உரை
   
96. கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ,
நல்லவை செய்வான் அரசன்;-இவர் மூவர்,
‘பெய்’ எனப் பெய்யும் மழை.
உரை
   
97. ஐங் குரவர் ஆணை மறுத்தலும், ஆர்வு உற்ற
எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும், நெஞ்சு அமர்ந்த
கற்பு உடையாளைத் துறத்தலும்,-இம் மூன்றும்
நற் புடையிலாளர் தொழில்.
உரை
   
98. செந் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும்,
வெஞ் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும்,
பெண்பால் கொழுநன் வழிச் செலவும்,-இம் மூன்றும்
திங்கள் மும் மாரிக்கு வித்து.
உரை
   
99. கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும், காமுற்ற
பெட்டாங்கு செய்து ஒழுகும் பேதையும், முட்டு இன்றி
அல்லவை செய்யும் அலவலையும்,-இம் மூவர்
நல் உலகம் சேராதவர்.
உரை
   
100. பத்திமை சான்ற படையும், பலர் தொகினும்
எத் திசையும் அஞ்சா எயில்-அரணும் வைத்து அமைந்த
எண்ணின் உலவா இரு நிதியும்,-இம் மூன்றும்
மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு.
உரை