31

‘மன்றம்' என்புழி அத்துச் சாரியையும் ஏழனுருபுந்தொக்கன.

"நன்றிப் பயன்தூக்கா நாணிலியுஞ் சான்றோர்முன்
மன்றிற் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி
வைத்த அடைக்கலங் கொள்வானு மிம்மூவர்
எச்சம் இழந்துவாழ் வார்"

(திரிகடுகம் - 62)

எனவும்,

"வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை "

(நல்வழி - 23)

எனவும் பிறருங் கூறியவாற்றான், ‘மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே 'என்றார்.

சான்றியதென அடைக்கலப் பொருளைஅபகரிப்பின் தெய்வங் கண்டு ஒறுத்தலின், ‘அன்றறிவா ரியாரென் றடைக்கலம் வௌவாத, நன்றியி னன்கினிய தில்'என்றார்.

தெய்வங் காணுமென்பதனை,

"வஞ்சித் தொழுகும்மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தோ மென்று மகிழன்மின் - வஞ்சித்த
எங்கும் உளன்ஒருவன் காணுங்கொ லென்றஞ்சி
அங்கங் குலைவ தறிவு "

(நீதிநெறி விளக்கம் - 94)

என்பதனாலும்,

அடைக்கலப்பொருளை அபகரிப்பிற்பெருந்துன்பம் விளையுமென்பதனை,

"அடைக்கலம் வௌவுத லின்னாவாங் கின்னா
அடக்க வடங்கா தார் சொல் "

(இன்னா - 41)

என்பதனானுந் தேர்க.

31. அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே
கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே
சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து
அறிந்துரைத்தல் ஆற்ற இனிது.