ஆற்றா : எதிர்மறை வினையெச்சமுற்று தொடியிடவாற்றா தொலைந்த தோள் என்றது உறுப்பு நலனழிதல் கூறியவாறு; ‘தொடியொடு தொல்கவின் வாடிய தோள்' என்பது முப்பால். போழ்ந்தால் என்பது போழ்ந்து எனத் திரிந்து நின்றது. உவமஉருபு தொக்கத்து. நெடுவிடை - மருவின்பாற்படும்; நெட்டிடை என்பதே பயின்ற வழக்காகலின். (6) இதுவுமது 7. நச்சியார்க் கீதலு நண்ணார்த் தெறுதலுந் தற்செய்வான் சென்றார்த் தரூஉந் தளரியலாய் பொச்சப் பிலாத புகழ் வேள்வித் தீப்போல எச்சாரு மின்னு மழை (ப-ரை.) தளர் இயலாய் - தளர்ந்த இயல்பினையுடையாய், நச்சியார்க்கு - தம்மை விரும்பியடைந்தார்க்கு, ஈதலும் - கொடுத்தலும், நண்ணார் - அடையாத பகைவரை, தெறுதலும் - அழித்தலும், தற்செய்வான் - தம்மை நிலைநிறுத்துவனவாக நினைத்து, (அவற்றின் பொருட்டு) சென்றார் - பொருள் தேடச் சென்ற தலைவரை, பொச்சாப்பு இலாத - மறப்பில்லாத, புகழ் - புகழையுடைய, வேள்வித் தீப்போல - வேள்வித்தீயைப்போல, எச்சாரும் - எம் மருங்கும், மின்னும் - மின்னாநிற்கும், மழை வானமானது, தரூஉம் - கொண்டு வரும் எ-று. அறஞ் செய்தற்கும் பகைதெறுதற்கும் பொருள் காரணமாதலை, ‘அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும், பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்.... தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்ற நங்காதலர்' என்னும் பாலைக்கலியானு மறிக. தற்செய்வான் சென்றார் : பன்மை யொருமை மயக்கம்; சில சொற்கள் வருவிக்கப்பட்டன. ‘தளிரியலாய்' என்பது பாடமாயின் தளிர்போலும் சாயலையுடையாய் என்று பொருள் கூறப்படும். பொச்சாப்பின்றிச் செய்தலாற் புகழுண்டாம் ஆகலின் பொச்சாப்பிலாத என்னும் பெயரெச்சம் காரணப்பொருட்டு. ‘பொச்சாப் பார்க்கில்லை புகழ்மை' என்பது திருவள்ளுவப் பயன் வேள்வித்தீ உவமம். அது மழைக்குக் காரணமென்பதற்குப் ஞாபகமாகவும் உள்ளது. (7) இதுவுமது 8. மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப் பெண்ணிய னல்லாய் பிரிந்தார் வரல்கூறும் கண்ணிய லஞ்சனங் தோய்ந்த போற் காயாவும் நுண்ணரும் பூழ்த்த புறவு.
|