பெருமடம் - காதலியது பெரிய மடப்பத்தை, நம்மாட்டு உரைத்து - நமக்குத் தெரிவித்து. நறுந்தண் கா - நறிய குளிர்ந்த சோலையில், உளரும் - அசையா நிற்கும் (ஆதலால் நீ விரையத் தேரைசி செலுத்துவாய்) எ-று. உறை - நீர்த்துளி : மூன்றன் தொகை ஊதை - குளிர்காற்று. உளர்தல் - அசைதல்; பேதை பெருமடம் - தலைவர் வாரா ரென்று கருதி வருந்தியிருக்கும் தலைவியது அறியாமை. (30) வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது 31. கார்ச்சே ணிகந்த கரைமருங்கி னீர்ச்சேர்ந் தெருமை யெழிலே றெறிபவர் சூடிச் செருமிகு மள்ளரிற் செம்மர்க்குஞ் செவ்வி திருநுதற் கியாஞ்செய் குறி. (ப-ரை.) எருமை எழில் ஏறு - எருமையினது எழுச்சியையுடைய ஆண், கார்ச்சேண் இகந்த - மேகத்தையுடைய வானின் எல்லையைக் கடந்து உயர்ந்த, கரை மருங்கின் - கரையின் பக்கத்திலுள்ள, நீர்ச் சேர்ந்து - நீரையடைந்து, ஏறி - எறியப்பட்ட, பவர் - பூங்கொடிகளை, சூடி - சூடிக்கொண்டு, செருமிகு மள்ளரில் - போரின்கண் மறமிக்க வீரரைப்போல, செம்மாக்கும் செவ்வி - இறுமாந்திருக்கும் காலமே, திருநுதற்கு - அழகிய நெற்றியை யுடையாளுக்கு, யாம் செய்குறி - நாம் மீள்வதற்குச் செய்த குறியாகும்; (ஆதலால் விரைந்து தேர் செலுத்துவாய்) எ-று. சேண் - ஆகாயம்; தூரமும் ஆம் எழில் - அழகுமாம். எறி துணித்த எனினும் பொருந்தும். பவர் - கொடி ‘அரிப்பவர்ப் பிரம்பின்' எனக் குறுந்தொகையும், ‘நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிடைந்து' எனப் புறநானூறும் கூறுதல் காண்க. மள்ளர் - வீரர்; போர்வீரர் வெட்சி, வஞ்சி முதலிய மாலைகளைச் சூடித் தருக்கியிருக்கு மாறு போலக் கடாக்கள் பூங்கொடிகளைச் சூடிக்கொண்டு தருக்கியிருக்கும் என்க. ‘மள்ளரன்ன தடங்கோட்டெருமை, மகளிரன்ன துணையொடு வதியும்' (ஐங்குறுநூறு) என்றார் பிறரும் குற்றிய லிகரம் அலகு பெறாதாயிற்று. (31) இதுவுமது. 32. கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போற் படாஅ மகிழ்வண்டு பாண்முரலுங் கானம் பிடாஅப் பெருந்தகை நற்கு.
|