7

மதுரைக் கண்ணங்கூத்தனார் அருளிய

கார் நாற்பது

மூலமும் உரையும்

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது

1. பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ1
வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானங்
கருவிருந் தாலிக்கும் போழ்து.2

(ப-ரை.) பொருகடல் வண்ணன் - கரையை மோதுங் கடலினது நிறத்தினையுடைய திருமால், மார்பில் புனை தார்போல் மார்பில் அணிந்த பூமாலைபோல, திருவில் - இந்திரவில்லை, விலங்கு ஊன்றி - குறுக்காக நிறுத்தி, தீம் பெயல் தாழ - இனிய பெயல் விழாநிற்க, வருதும் என மொழிந்தார் - வருவேம் என்று சொல்லிப் போன தலைவர், வானம் - மேகமானது, கரு இருந்து கருக்கொண்டிருந்து, ஆலிக்கும் போழ்து - துளிகளைச் சொரியாநிற்கையில், வாரார் கொல் - வாராரோ? (வருவார்) என்றவாறு.

பொருகடல் : வினைத்தொகை, புனைதார் என்க. திரு. - அழகு, விரும்பப்படுந்தன்மை. திருவில் என்பது இந்திரவில் என்னும் பொருட்டு; ‘திருவிற் கோலி' என ஐங்குறு நூற்றுள் வருவதுங் காண்க. விலங்கு - குறுக்கு : ‘விலங்ககன்ற வியன்மார்ப' என்பது புறம். ஆக என்னுஞ் சொல் வருவிக்கப்பட்டது நீலநிறமுடைய வானின்கண் பன்னிறமுடையத்தாய் வளைந்து தோன்றும் இந்திரவில்


1. தீம்பெயல் வீழ என்றும் பாடம்.

2. பொழுது என்றும் பாடம்.